ஷா ஆலம், செப். 26 - அவமதிக்கும் நோக்கிலானது என கருதப்படும்
அறிக்கையை வெளியிட்டதற்காக கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது
சனுசி முகமது நோர் கோரிய பகிரங்க மன்னிப்பு மேன்மை தங்கிய
சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கவனத்திற்குக்
கொண்டுச் செல்லப்பட்டது.
இந்த தகவலை வெளியிட்ட சிலாங்கூர் அரச அலுவலகம், சுல்தானுக்கு
சனுசி எழுதிய மன்னிப்பு கடிதத்தையும் தனது பேஸ்புக் பக்கத்தில்
பதிவேற்றம் செய்துள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு ஆட்சியாளருக்கு எதிராக
அவமரியாதையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு
கோருவதாக செப்டம்பர் 25 ஆம் தேதியிடப் பட்ட அந்த கடிதத்தில்
குறிப்பிடப் பட்டுள்ள்ளது.
மேன்மை தங்கிய சுல்தானின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகவும்
சங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துகளை வெளியிட்டதை
ஒப்புக்கொண்ட சனுசி, அரண்மனைக்கு எதிராக எதிர்மறையான
விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதற்கு மன்னிப்பு
கோரியுள்ளார் என அரச அலுவலகம் கூறியது.
எனினும், அந்த மன்னிப்பை சிலாங்கூர் சுல்தான் ஏற்றுக் கொண்டாரா
என்பது குறித்து அந்த பதிவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மந்திரி புசாரின் நியமனத்தை சிறுமைப் படுத்தும் விதமாக வெளியிட்ட
அந்த அறிக்கை தொடர்பில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி மற்றும் சிலாங்கூர் மக்களிடமும் தாம் மன்னிப்பு
கோருவதாக டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோர் நேற்று அறிவித்திருந்தார்.
தகாத வார்த்தை களுக்காகவும் ஆழ்ந்த வருத்தத்துடன் பணிவுடனும்
ஆட்சியாளரிடம் மந்திரி புசார் மற்றும் மாநில மக்களிடமும் நான்
பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் என்று நேற்று இங்குள்ள விஸ்மா டாருள்
அமானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அறிக்கைகளை வெளியிடும் போது நான் மிகுந்த
கவனமுடன் இருப்பேன் என உறுதியளிக்கிறேன். எனது அறிக்கைகள்
கண்ணியமானதாகவும் மலாய் கலாசார பாரம்பரியத்தை காக்கும்
வகையிலும் மலாய் ஆட்சியாளர்கள் மற்றும் அரச அமைப்பின்
கௌரவத்தை காக்கும் வகையிலும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
முத்தியாராவில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில தேர்தல் பிரசாரத்தின்
போது நிந்தனைக்குரிய கருத்துகளை வெளியிட்டது தொடர்பாக சனுசிக்கு
எதிராக கடந்த ஜூலை 18ஆம் தேதி ஷா ஆலம் நீதிமன்றத்தில்
குற்றஞ்சாட்டப்பட்டது.


