கோலாலம்பூர், செப். 26 - விமர்சனங்களுக்கு மத்தியிலும் இலக்கிடப்பட்ட
டீசல் மானியத் திட்ட அமலாக்கம் உள்ளிட்ட நடைமுறைக்கு சாத்தியமான
நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் கூறினார்.
இலக்கிடப்பட்ட டீசல் மானியத் திட்டம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்து, பங்குச் சந்தையின் நிலைத்தன்மையையும் அதிகரித்துள்ளதோடு 2023ஆம் ஆண்டு நிதிப் பொறுப்புச் சட்ட அமலாக்கத்தையும் வலுப்படுத்தியுள்ளது என்று அவர்
சொன்னார்.
இந்த நடவடிக்கை சந்தையில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இலக்கிடப்பட்ட டீசல் மானியத் திட்டத்தை நாம் அமல்படுத்தியப் பின்னர் டீசலின் விலை 40 காசு குறைந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதோடு பொருளாதார சீர்திருத்தத்தில் நமது வலுவான கடப்பாட்டையும்
பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மானியங்கள் சரியான முறையில் இலக்கிடப்படாத பட்சத்தில் குறிப்பாக மானியச் சலுகைகளை பணக்காரர்களும் அனுபவிக்கும் போது நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமையாக அமைந்து விடுகிறது என்று அவர் தெரிவித்தார்.
தங்கள் பிள்ளைகள் தனியார் உயர்கல்விக் கூடங்களில் பயில்வதற்கு 100,000 வெள்ளி வரை செலவிடத் தயாராக இருக்கும் பெற்றோர்கள் பொது உயர்கல்விக் கூடங்களில் கல்வி பயில 10,000 வெள்ளியைச் செலவழிக்கத் தயாராக இல்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். அரசாங்க மருத்துவமனைகளிலும் இதே நிலைதான் நிலவுகிறது. அவர்கள் (பணக்காரர்கள்) குறைந்த கட்டணத்தில் முதல் வகுப்புச் சலுகைகளை
அனுபவிக்கின்றனர் என்றார் அவர்.
பிரிட்டனின் தேசிய சுகாதாரச் சேவையை உதாரணம் காட்டிய பிரதமர், சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் வழங்கப்பட்ட அதிகப்படியான மானியம் காரணமாக அத்திட்டம் இறுதியில் நீடிக்க இயலாத நிலை ஏற்பட்டது என்றார்.


