ஷா ஆலம், செப். 24 - எதிர்வரும் நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2025 சிலாங்கூர் பட்ஜெட், தேசியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்பாளர் என்ற மாநிலத்தின் நிலையை தக்கவைக்க பல புதிய சவால்களை கோடிட்டுக் காட்டுகிறது.
சிலாங்கூரில் முதல் ஏ.ஐ.மேம்பாட்டு மையத்தை அமைப்பதன் மூலம் டிஜிட்டல் மயமாக்கல் துறையை குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளோம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த நவீனமயமாக்கல் செயல்முறையை நிறுத்த முடியாது. மாறாக, செயல்முறைகளை எளிதாக்குவதற்கும் துல்லியத்தை மேம்படுத்துவதற்கும் ஏதுவாக தொழில்நுட்பத்தை நன்மைக்காகப் பயன்படுத்துவதற்கான ஒரு கருத்தை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
ஏ.ஐ. மையம் உட்பட பல மையங்களை நிறுவுவதற்கு நாங்கள் கடந்தாண்டு முன்மொழிந்ததோடு கோரிக்கையும் விடுத்தோம். மேலும் ஏ.ஐ. தொடர்ந்து நம்மை முன்னோக்கி கொண்டுச் செல்லும் என்று பலர் நம்புவதால் இதை விரைவில் முடிக்க முடியும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
இன்று இங்குள்ள செத்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் பட்ஜெட் கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநிலச் செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிமும் கலந்து கொண்டார்.
டிஜிட்டல் மயமாக்கல் துறையின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் தவிர்த்து பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவற்றால் ஏற்படும் தாக்கங்களை எதிர்கொள்வதற்கான மாநிலத்தின் தயார் நிலையையும் 2025 சிலாங்கூர் பட்ஜெட் வலியுறுத்தும் என்றும் அமிருடின் கூறினார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட பெரிய வெள்ளம் போன்ற சாத்தியமான பேரழிவுகளைச் சமாளிக்க மாநிலம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதோடு தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் அது வலுப்படுத்த வேண்டும்.
நான் முன்மொழிந்த இரண்டாவது மையம் பருவநிலை மாற்ற ஆராய்ச்சி மையமாகும். கடந்த 2021ஆம் ஆண்டு பேரழிவை நாம் எதிர்கொண்டோம். இப்போது அது வட பிராந்தியத்தில் நடக்கிறது. மறுபடியும் இங்கு நடக்கும் என்பது சாத்தியமற்றது அல்ல என்றார் அவர்.


