மலாக்கா, செப். 24 - மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவர் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ரோரோ குப்பைத் தொட்டியை மோதியதில் உயிரிழந்தார். அதில் பயணம் செய்த அவரின் சகோதரியும் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் லெபோ சுங்கை ஊடாங்-பாயா ரும்புட்-ஆயர் குரோ சாலையில் நேற்று மாலை 6.15 மணியளவில் நிகழ்ந்தது.
பதினெட்டு வயதான முகமது அமிருள் ஹஸிலி தனது ஐந்து வயதுச் சகோதரியான நுர் அஃபிக்கா சோபியாவுடன் டேமாக் டிவி 110 ரக மோட்டார் சைக்கிளில் ஆயர் குரோவிலிருந்து சுங்கை ஊடாங் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாடிட் கூறினார்.
சம்பவ இடத்தை அடைந்த போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ரோரோ குப்பைத் தொட்டியை கவனிக்கத் தவறிய முகமது அமிருள் கட்டுப்பாட்டை இழந்து அதில் மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் பலத்தக் காயங்களுக்குள்ளான அவ்விரு உடன் பிறப்புகளும் மலாக்கா மருத்துவமனையின் சிவப்பு மண்டலத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர், அந்த ரோரோ குப்பைத் தொட்டியின் உரிமையாளர் மற்றும் விபத்தை நேரில் கண்ட சாட்சிகளை தாங்கள் தொடர்பு கொள்ள முயன்று வருவதாக ச் சொன்னார்.


