கோலாலம்பூர், செப். 24 - 'ஒப் குளோபல்' சோதனையின் போது மீட்கப்பட்ட அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான இல்லங்களில் வசிக்கும் 572 சிறார்களை ஆதரவற்றோர் எனக் கூறி ஜி.ஐ.எஸ்.பி. ஹோல்டிங்ஸ் நன்கொடை கோரியதற்கான சாத்தியக்கூறுகளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக இருக்கும் தங்கள் பெற்றோரைத் தெரியாது என்று கூறும்படி அந்த இல்லங்களில் உள்ள சிறார்கள் அறிவுறுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் கூறினார்.
அவர்கள் தங்கள் பிள்ளைகள் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மாறாக, அவர்களில் சிலருக்கு 'பின்' அல்லது 'பிந்தி' அப்துல்லா என பெயர் இருப்பதால் தாங்கள் ஆதரவற்றோர் என்று கூறுகின்றனர். இது நன்கொடைகளை வசூலிப்பதற்கான ஒரு தந்திரமாக இருக்கலாம். பின்னர் அது பிற நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படலாம் என்று கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
பல உறுப்பினர்கள் விசாரணையின் போது அப்பிள்ளைகள் தங்களுடையவை என்பதை ஒப்புக்கொள்ள மறுப்பதால் மோசடி செய்ததற்காகக் குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் அவர்களை விசாரிக்க முடியும் என்று அவர் கூறினார்.
சில உறுப்பினர்களுக்கு நான்கு மனைவிகள் மற்றும் 34 பிள்ளைகள் இருக்கும் தகவலையும் ரஸாருடின் அம்பலப்படுத்தினார். அவர்களில் பலர் நிறுவனத்தின் தொண்டு இல்லங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த 34 பிள்ளைகளில் இருவர் மட்டுமே பெற்றோருடன் வசிக்கின்றனர். மற்ற 32 குழந்தைகளின் பெயர்களைக் கேட்டால் அது அவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதுவரை குளோபல் இக்வான் நிறுவனம் சம்பந்தப்பட்ட 882,795.94 வெள்ளியை உட்படுத்திய 138 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட வேளையில் மேலும் 15 கணக்குகள் மூடப்பட்டு விட்டன என அவர் தெரிவித்தார்.
மேலும், 18 லட்சத்து 72 ஆயிரத்து 085 வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான 22 வாகனங்களும் 14 சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.


