கோலாலம்பூர், செப். 24 - அரசாங்கத்தின் 2023 பொது சுகாதாரத்திற்கான
புகைக்கும் பொருள் கட்டுப்பாட்டுச் சட்டம் (சட்டம் 852) புகை
வஸ்துகளிலிருந்து (சிகிரெட் மற்றும் வேப் எனப்படும் மின் சிகிரெட்)
சமூகத்தை குறிப்பாக சிறார்களைப் பாதுகாக்கும்.
சந்தையிலுள்ள அனைத்து சிகிரெட் சார்ந்த பொருள்களையும் இந்த சட்டம்
கட்டுப்படுத்தும் அதேவேளையில் சம்பந்தப்பட்ட தயாரிப்புகள் சுகாதார
அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் இது
உள்ளடக்கியுள்ளதால் இந்த சட்ட அமலாக்கத்திற்கு பெற்றோர்களும்
ஆசிரியர்களும் நீண்ட காலமாகக் காத்திருந்ததாக சுகாதார அமைச்சின்
நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவு உதவித் தலைமை இயக்குநர் டாக்டர்
முவாஸ் சயுத்தி கூறினார்.
மருந்துகள் பாதுகாப்பானவை என உறுதி செய்யப்படும் சுகாதார
அமைச்சின் இதரப் பதிவுகளைப் போல் இந்த பதிவு இருக்கும் என்பது
பொருள் அல்ல. இந்த பதிவு முறையின் கீழ் சம்பந்தப்பட்ட புகையிலைப்
பொருள்களைக் கட்டுப்படுத்துவதற்கும் அவற்றின் உள்ளடக்கத்தை அறிந்து
கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்று அவர் சொன்னார்.
உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டப்
பொருள்களை விற்பதற்கான அனுமதியை மீட்டுக் கொள்வதற்கும்
அதிகாரம் உள்ளது என்று பெர்னாமா டிவியின் ருவாங் பிச்சாரா நிகழ்வில்
அவர் தெரிவித்தார்.
2004ஆம் ஆண்டு புகையிலை தயாரிப்பு பொருள் விதிமுறைகள் 1983ஆம்
ஆண்டு உணவுச் சட்டத்தின் கீழ் உள்ளதால் புகையிலைப் பொருள்களைக்
கட்டுப்படுத்துவதற்கு சிறப்புச் சட்டம் தேவை என்ற நோக்கத்தில் இந்த
சட்டம் 825ஐ உருவாக்குவதற்கு அமைச்சு கடும் முயற்சி மேற்கொண்டது
என்றார் அவர்.
புகையிலைப் பொருள் கட்டுப்பாட்டு விதிமுறைகள் 1983ஆம் ஆண்டு
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ளது. சிகிரெட் மற்றும் வேப்
எனப்படும் மின் சிகிரெட் உணவுப் பொருள்கள் அல்ல என்பது நாம்
அறிந்ததே. ஆகவே, ஆபத்தான இந்த பொருள்களை கட்டுப்படுத்துவதற்கு
பிரத்தியேகச் சட்டத்தை உருவாக்க நாங்கள் முயற்சி மேற்கொண்டோம்
என அவர் குறிப்பிட்டார்.


