குளுவாங், செப். 24 - மக்கோத்தா தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று நடத்தப்படும் தொடக்கக்கட்ட வாக்களிப்பில் 4,911 பேர் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற உள்ளனர்.
இன்று வாக்களிக்கும் தகுதி உள்ளவர்களில் 4,510 பேர் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் துணைவியர் ஆவர். எஞ்சியோர் போலீஸ்காரர்களாவர்.
இந்த தொடக்க கட்ட வாக்களிப்பு மக்கோத்தா இராணுவ முகாமில் அமைந்துள்ள டேவான் மக்கோத்தா, குளுவாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போலீஸ் குடியிருப்பு பகுதியிலுள்ள டேவான் பெங்காமான் ஜம்ருட் மற்றும் சுல்தான் சர் இப்ராஹிம் தேசிய பள்ளி ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும்.
இந்த மூன்று மையங்களும் இன்று காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும்.
மக்கோத்தா தொகுதி இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் சைட் ஹூசேன் அப்துல்லா மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் முகமது ஹைசான் ஜாபர் இடையே போட்டி நிலவுகிறது.
இத்தொகுதி வேட்பாளர் டத்தோ ஷரிபா அஜிசா சைட் ஜைன் (வயது 63) கடந்த ஆகஸ்டு மாதம் 2ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலில் மொத்தம் 66,318 வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். இத்தேர்தலுக்காக 20 வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன.


