புத்ரா ஜெயா, செப் 23 - மலேசியா தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின்
பொறுப்பாளர்கள் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சிலின் முதன்மை பத்திரிகை செயலாளர் புவான் ஹனிம் மற்றும் அமைச்சரின் தொடர்பு துறை அமைச்சின் ஊடக மற்றும் தொடர்புப் பிரிவு இயக்குநர் டத்தோ சிவபாலன் ஆகியோருடன் இன்று சந்திப்பு நடத்தினர்.
சங்கத்தின் நிதி நிலைமை, அலுவலகம், ஓய்வு பெற்ற மூத்த பத்திரிகையாளர், பணியாளர்களுக்கு சிறப்பு நிதி, குடும்ப தின விழா, சிறப்பு மானியம் உட்பட பத்து கோரிக்கை குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டது.
சங்கத்திற்கு எந்த வகையில் உதவிகள் வழங்க முடியும் என்பது குறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல பதிலை வழங்குவதாகப் புவான் ஹனிம் தெரிவித்தார்.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், உதவித் தலைவர் காளிதாசன், ரவி முனியாண்டி ,செயலாளர் வெற்றி விக்டர், துணை செயலாளர் குணா, ஆட்சிக் குழு உறுப்பினர்களான காளிதாஸ் சுப்ரமணியம், இராமன் குட்டி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில் ஹவானா திட்டத்தின் (SKIM HAWANA) வாயிலாக உடல் நலம் குன்றிய தமிழ்ப் பத்திரிக்கையாளர்கள் முன்னாள் பத்திரிகையாளர்களுக்கு, அமைச்சர் நேரடியாக வருகை தந்து உதவி நிதி வழங்குவதற்கு ஏதுவாக அந்த பட்டியலை தயார் செய்யும் படி அதிகாரி கோரிக்கை வைத்தார்.
அதோடு சங்கத்திற்கு ஒரு அலுவலகம் அமைச்சின் வாயிலாக தலைநகரில் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அமைச்சின் வாயிலாக மீடியா தொழிநுட்ப பயிற்சி செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டது. அதே சமயம், அமைச்சின் கீழ் செயல்படும் மன்றத்தில் மலேசிய தமிழ்ப் பத்திரிகை சார்ந்த ஒரு பிரதிநிதி அமர்த்தபடுவார்.
நிருபர், புகைப்பட கலைஞர்களுக்கு சிறப்பு பெட்ரோல் சலுகை அட்டை திட்டத்தை அமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்கிறோம் என்று பதில் கொடுத்தனர்.
சங்கத்திற்கு வருடா வருடம் ஒரு சிறப்பு நிதி வழங்க கோரிக்கை முன் வைக்கப்பட்டது அதனை அமைச்சர் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டது.
சங்கத்தின் செயலவை எடுத்துள்ள இந்த முயற்சி அடுத்த கட்ட கூட்டத்தில் அமைச்சர் தலைமையில் நடத்தப்படும் கூட்டத்தில் ஒரு நல்ல அறிவிப்பு கிடைக்கும் என நம்புவோம் என்று சங்கத்தின் செயலாளர் வெற்றி விக்டர் தெரிவித்தார்.


