ஷா ஆலம், செப். 23 - தெலுக் பங்லிமா காராங் பகுதியில் வீடு புகுந்து
கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று உள்நாட்டு ஆடவர்களை
போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த போலீஸ்காரர்கள் தடுத்து நிறுத்த முயன்ற
போது அவர்களை மோதித் தள்ளி விட்டு அக்கொள்ளையர்கள்
தப்பியோடியதாக கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் அகமது ரிட்வான் முகமது நோர் கூறினார்.
தனது அண்டை வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்தது
தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் தாங்கள்
ஆடவர் ஒருவரிடமிருந்து புகாரைப் பெற்றதாக அவர் சொன்னார்.
இதனைத் தொடர்ந்து போலீஸ் குழு ஒன்று அங்கு விரைந்தது. சம்பவ
இடத்தை அடைந்த போது எஸ்.யு.வி. ரக வாகனம் ஒன்று
போலீஸ்காரர்களின் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியது. இதனைத்
தொடர்ந்து கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனத்தின் சக்கரம் மீது
போலீஸ்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். எனினும், அக்கும்பல்
அங்கிருந்து தப்பியது என்றார் அவர்.
அக்கும்பல் பயன்படுத்திய வாகனத்தின் பதிவு எண் போலியானது என்பது
விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூறிய அவர், இச்சம்பவத்தில்
போலீஸ்காரர்கள் காயமின்றித் உயிர்த்தப்பினர் என்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 307வது பிரிவின் கீழ்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது குறித்து தகவல்
அறிந்தவர்கள் 013-9311208 என்ற எண்களில் விசாரணை அதிகாரி
இன்ஸ்பெக்டர் முகமது பாட்சிலைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர்
கேட்டுக் கொண்டார்.


