மெர்சிங், செப். 23 - ஆசிரியை ஒருவர் ஓட்டிக் சென்ற கார் யானை மீது
மோதியது. இந்த சம்பவம் நித்தார்-மெர்சிங் சாலையின் 6வது கிலோ மீட்டரில் இன்று
அதிகாலை நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் 30 வயதான அந்த ஆசிரியையிடமிருந்து
அதிகாலை 6.45 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக மெர்சிங்
மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் டிஎஸ்பி ஷாரிப் ஷாய் ஷாரிப்
மோண்டோய் கூறினார்.
அந்த பெண்மணி தனியொருவராக ஹோண்டா சிட்டி காரில் குளுவாங்,
எண்டாவிலிருந்து கஹாங் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது
சாலையில் இருந்த யானையை மோதியது தொடக்கக் கட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் சொன்னார்.
இந்த விபத்தில் அந்த பெண்மணிக்கு கடுமையான காயம் ஏதும்
ஏற்படவில்லை. யானை அவ்விடத்தை விட்டு அகலும் வரை அவர்
காரிலியே அமர்ந்திருந்தார். இந்த விபத்தினால் அந்த யானைக்கு ஏற்பட்ட
காயம் குறித்த விபரங்கள் தெரியிவில்லை. இவ்விபத்துக்குப் பின்னர் அந்த
யானை அருகிலுள்ள செம்பனைத் தோட்டதை நோக்கி நகர்ந்தது என அவர்
பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
இச்சாலையை பயன்படுத்தும் வாகனமோட்டிகள் மிகுந்த கவனத்துடன்
இருக்கும் அதேவேளையில் இதுபோன்றச் எதிர்பாராத சம்வங்கள் நிகழும்
பட்சத்தில் பதற்றமடையாமல் பொறுமை காக்க வேண்டும் என அவர்
சொன்னார்.
இங்குள்ள கம்போங் திரியாங் பெசார் பகுதியில் சில யானைகள்
கூட்டமாகக் காணப்பட்டது மற்றும் பெல்டா நித்தார்2 பெல்டா செம்பனைத்
தோட்டத்தில் இரு ஆடவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது புலி
ஒன்று தென்பட்டது தொடர்பான பதிவுகள் அண்மையில் சமூக
ஊடகங்களில் பகிரப்பட்டன.


