ஈப்போ, செப். 23 - இங்குள்ள ஜாலான் கிளேபாங் ரியாவில் நேற்று
மேற்கொள்ளப்பட்ட ‘ஓப்ஸ் சம்சிங் ஜாலானான்‘ சோதனை
நடவடிக்கையில் 69 மாணவர்கள் உள்பட 136 பேர் தடுத்து
வைக்கப்பட்டனர்.
சுற்றுச்சூழல் துறை, தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனம்
(ஏ.ஏ.டி.கே.) ஆகிய துறைகளின் ஒத்துழைப்புடன் பேராக் மாநில போலீஸ்
தலைமையகம் நேற்று மாலை 6.00 மணி தொடங்கி இன்று விடியற்காலை
வரை இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.
சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட மற்றும் அந்த
பந்தயத்தை கண்டு ரசித்த குற்றங்களுக்காக 12 முதல் 45 வயது
வரையிலான 130 ஆடவர்களும் ஆறு பெண்களும் கைது செய்யப்பட்டதாகப்
பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஜிசி மாட் அரிஸ் கூறினார்.
பேராக் கிளேபாங் பகுதியில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்
மற்றும் சாலை விதிமுறைகளுக்கு புறம்பான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படுவது தொடர்பில் பொது மக்களிடமிருந்து தாங்கள்
புகாரைப் பெற்றதாக அவர் சொன்னார்.
சட்டவிரோத பந்தயத்தில் ஈடுபட்ட அனைவரும் சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 42(1)வது பிரிவின் கீழ் விசாரணைக்காக தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர் என்று இந்த சோதனை நடவடிக்கைக்குப் பின்னர்
கம்போங் தாவாஸ் காவல் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்
கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில் கைதான அனைவருக்கு எதிராகவும் சிறுநீர்
சோதனை நடத்தப்பட்டது. அதில் மாணவர் அல்லாத இருவர்
மெத்தம்பெத்தமின் போதைப் பொருளை உட்கொண்டிருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது என்றார் அவர்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுக்காக
மொத்தம் 168 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாகவும் டத்தோ அஜிசி
குறிப்பிட்டார்.


