குளுவாங், செப். 23- நான்காம் படிவக் கல்வியை பாதியில் கைவிட்ட
மற்றும் படிப்பில் நாட்டமில்லாத மாணவர்களுக்கு உதவும் வகையில்
சிறப்பு தொழில்நுட்ப மற்றும் தொழில்கல்வித் திட்டத்தை (திவேட்)
அரசாங்கம் அமல்படுத்தவிருக்கிறது.
இந்த திட்டத்தை இவ்வாண்டு இறுதியில் அமல்படுத்துவது தொடர்பில்
தாம் கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக்குடன் பேச்சுவார்த்தை
நடத்தியுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட்
ஹமிடி கூறினார்.
கல்வியைத் தொடர்வதில் ஆர்வம் இன்றி இருக்கும் மாணவர்களுக்கு
வாய்ப்பு வழங்கும் நோக்கில் திவேட் கல்விக்கூடங்களில் நுழைவதற்கான
எழுத்துப்பூர்வ முறையில் அல்லாத சிறப்புத் தேர்வினை சம்பந்தப்பட்ட
மாணவர்களுக்கு நடத்துவது குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம்
என்ற அவர் சொன்னார்.
எஸ்.பி.எம். தேர்வினை எழுதாவிட்டால் எதிர்காலம் இல்லாமல் போகும் என
நினைக்க வேண்டாம். திவேட் கல்விச் சூழியல் முறையில் எஸ்.பி.எம்.
இல்லாத மாணவர்களும் எஸ்.பி.எம். தேர்வுக்கு இணையான திவேட்,
மலேசிய தொழில்திறன் சான்றிதழ் பயிற்சி (எஸ்.கே.எம்.) 1 மற்றும் 2,
டிப்ளோமாவுக்கு இணையான எஸ்.கே.எம். 3,4 மற்றும் 5 பயிற்சிகளில்
பங்கேற்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய மாணவர்களுக்கு உகந்த கல்விச் சூழலை நாம் ஏற்படுத்தித் தர
வேண்டும். நாட்டிற்கு ஆள்பலம் தேவைப்படுவதோடு நாட்டில் முதலீடு
செய்ய விரும்பும் முதலீட்டாளர்களும் தங்கள் ஆள்பலத் தேவைக்கு
இளைஞர்களைத் தேடுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு வட்டார இந்திய
சமூகத்துடனான சந்திப்பு நிகழ்வில் உரையாற்றிய போது அம்னோ
தலைவருமான அவர் இவ்வாறு கூறினார்.
இந்த எஸ்.கே.எம். திட்டத்தில் அதிகமான இந்திய இளைஞர்கள்
பங்கேற்பதை ஊக்குவிக்கும் பொருட்டு மஇகா தேசியத் தவைலர் டான்ஸ்ரீ
எஸ்.ஏ. விக்னேஸ்வரன் உள்ளிட்ட இந்திய சமூகத் தலைவர்களுடன் தாம்
பேச்சு நடத்தி வருவதாக ஜாஹிட் குறிப்பிட்டார்.


