கோலாலம்பூர் செப். 20 - மலேசியாவிற்கு வருகை புரிந்த இந்திய வெளியுறவு இணை அமைச்சர் கிர்தி வர்டன் சிங்குடன் தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி மற்றும் பிரதமர் இலாக்கா ( சட்டம் மற்றும் நீதித்துறை சீர்திருத்தம்) துணையமைச்சர் எம். குலசேகரன் ஆகியோர் சந்திப்பு நடத்தினர்.
இந்தியா மற்றும் மலேசியா இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இந்திய இணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதியுடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார்.
இவ்விரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு மேலும் வலுபெற மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டது. அதேவேளையில் சட்டம் மற்றும் நீதி சார் சீர்திருத்தம் குறித்து துணையமைச்சர் குலசேகரனுடன் வர்டன் சிங் விரிவாக பேசினார்.
இதனைத் தொடர்ந்து மலேசிய வெளியுறவு துணையமைச்சர் முகமட் அலாமினுடன் வர்டன் சிங் தனிப்பட்ட சந்திப்பை நடத்தினார். தமது மலேசிய வருகையின் போது 15 ஆவது அனைத்துலக கோப்பியோ மாநாட்டிலும் இந்திய இணை அமைச்சர் கலந்து கொண்டார்.
தமது இந்த வருகையின் போது மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறையில் திருவள்ளுவர் இருக்கை அமைப்பது மீதான புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்தை பார்வையிட்டார்.
மேலும் துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத இருக்கை அமைப்பது மீதான புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்தையும் அவர் பார்வையிட்டார்.


