புத்ராஜெயா, செப். 20 - தேசியக் கடனைக் குறைக்க உதவும் வகையில் வெளிநாட்டுப் பயணங்களுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் ஒப்புதல் பெறுமாறு அனைத்து அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில் தெரிவித்தார்.
சிறந்த நிர்வாகம் மற்றும் ஆட்சி முறையை உறுதிப்படுத்த வெளிநாட்டுப் பயணங்கள் உட்பட பல்வேறு அம்சங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை பிரதமர் உணர்ந்துள்ளார் என்று ஒற்றுமை அரசின் பேச்சாளராகவும் பணியாற்றும் பாஹ்மி சொன்னார்.
தேசியக் கடனைக் குறைக்க நாங்கள் முயற்சி செய்து வரும் நிலையில் வெளிநாட்டுப் பயணங்கள் போன்ற அம்சங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை பிரதமர் எடுத்துரைத்துள்ளார். இந்த பயணங்களுக்கு நியாயமான காரணம் இருக்க வேண்டும். மேலும் செலவினக் குறைப்பு மற்றும் சேமிப்பை கருத்தில் கொள்ள வேண்டும்.
விநியோக முறையில் மேம்பாடு, திட்ட வழிமுறைகள் மற்றும் தாமதம், ஒத்திவைப்பு அல்லது தோல்வியுற்ற திட்டங்கள் ஆகியவை இல்லாதிருப்பதை உறுதிப்படுத்துவதும் சமமான அளவு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ஒவ்வொரு வெள்ளி பொது நிதியும் முறையாகச் செலவழிக்கப்படுவதை உறுதி செய்ய பிரதமர் விரும்புகிறார் என்று இன்று அமைச்சின் மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் போன்ற சட்டப்பூர்வ அமைப்புகளின் வெளிநாட்டு பயணங்களுக்கு தனது ஒப்புதல் தேவை என்றும் ஃபாஹ்மி மேலும் தெரிவித்தார்.


