சுபாங் ஜெயா, செப். 20 - இறக்குமதி செய்யப்படும் கால்நடை தீவனத்தை சார்ந்திருப்பதைக் குறைக்கவும் சந்தை விலையை நிலைப்படுத்தவும் சிலாங்கூர் தனது தானிய சோள உற்பத்தியை விரிவுபடுத்தவிருக்கிறது.
சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) இதுவரை 120 ஏக்கர் பரப்பளவில் 1.2 டன் தானிய சோளத்தை அறுவடை செய்துள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
எதிர்காலத்தில் 500 ஏக்கர் அளவுக்கு உற்பத்தியை விரிவுபடுத்த அந்த அரசு நிறுவனம் இப்போது திட்டமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
கோல லங்காட் மாவட்டத்தின் தஞ்சோங் சிப்பாட்டில் தானிய சோள சேகரிப்பு மையத்தையும் பி.கே.பி.எஸ். தற்போது உருவாக்கி வருகிறது என்று அவர் சொன்னார்.
கால்நடைத் தீவனச் செலவு அதிகரிப்பினால் ஏற்படும் சுமையைக் குறைக்கும் நோக்கில் தானியச் சோளத் திட்டத்தை மாநில அரசு தற்போது செயல்படுத்தியுள்ளது என அவர் சொன்னார்.
தானியச் சோளம் எங்கள் குழுவின் புத்தாக்க ஆராய்ச்சியின் பயனாக கிடைத்த விளைபொருளாகும். ஆனால் அந்த திட்டத்தை மேலும் மேம்படுத்த பொருத்தமான பயிர்களை நாம் அடையாளம் காண வேண்டும் என்று தெரிவித்தார்.
செர்டாங்கிலுள்ள மலேசிய வேளாண் கண்காட்சி பூங்காவில் நடைபெறும் (மேப்ஸ்) மலேசிய வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் சுற்றுலா கண்காட்சியில் (மஹா) சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
கோலா லங்காட்டின் தஞ்சோங் சிப்பாட்டில் 300 ஏக்கர் பரப்பளவில் தானிய சோள சேகரிப்பு மையத்தை பி.கே.பி.எஸ் உருவாக்கி வருவதாகவும், அதில் சோளத்தை உலர்த்தும் மற்றும் உடைக்கும் இயந்திரங்கள் பொருத்தப்படுவதாகவும் கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது .
தற்போது 30 சதவீதம் நிறைவடைந்துள்ள இந்த மையம் ஏறக்குறைய 200 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு வசதியை கொண்டுள்ளது.


