கோலாலம்பூர், செப். 19 - நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட ஓப்
குளோபல் நடவடிக்கையில் குளோபல் இக்வான் செர்விசஸ் அண்ட்
பிசினஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி,
அவரின் மனைவி மற்றும் அல்-அர்க்காம் இயக்கத்தின் முன்னாள்
தோற்றுநரின் மகன் உள்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டதை அரச
மலேசிய போலீஸ் படை இன்று உறுதிப்படுத்தியது.
புக்கிட் அமான் டி8 பிரிவு மற்றும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்
துறையின் டி14 பிரிவு ஆகியவை தலைநகர் புக்கிட் பிந்தாங், ஜாலான்
இம்பியில் உள்ள பெர்ஜெயா டைம் ஸ்குவெயர் ஏ டவரில் உள்ள நான்கு
குடியிருப்புகள் மீது இன்று அதிகாலை 5.40 மணிக்கு ஏக காலத்தில்
அதிடிச் சோதனையை மேற்கொண்டதாக தேசிய போலீஸ் படைத்
தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் கூறினார்.
இந்த சோதனை நடவடிக்கையில் 25 முதல் 65 வயது வரையிலான 12
ஆண்கள் மற்றும் ஏழு பெண்களை உள்ளடக்கிய 19 பேரை தாங்கள் கைது
செய்ததாக அவர் சொன்னார்.
விசாரணை மற்றும் ஆவணங்களை தயார் படுத்தும் நடவடிக்கை
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் அவர்கள்
அனைவருக்கும் எதிரான எதிரான தடுப்புக் காவல் அனுமதி ஷா ஆலம்
நீதிமன்றத்தில் இன்று மாலை பெறப்படும் என்றார்.
இதனிடையே, புக்கிட் காயு ஹீத்தாமில் நேற்று கைது செய்யப்பட்ட
குளோபல் இக்வான் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரியின்
மகனை விசாரணைக்காக ஒரு வார காலத்திற்கு தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
குளோபல் இக்வான் நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் என
சந்தேகிக்கப்படும் ஐவரை நேற்று கெடா மாநிலத்தின் புக்கிட் காயு ஹீத்தாமில் கைது செய்த போலீசார் அவர்களிமிருந்து மோட்டோர்ஹோம் எனப்படும் தங்கும் வசதி கொண்ட இரு ஆடம்பர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.
அவர்கள் அனைவரும் புக்கிட் காயு ஹீத்தாம் வழியாக தாய்லாந்துக்கு
தப்பியோட முயன்றதாக நம்பப்படுகிறது.


