(ஆர்.ராஜா)
செமினி, செப் 19 - புரோகா பாலாவ் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து முன்னாள் தோட்டப் பாட்டாளிகளுக்குத் தலா 50,000 வெள்ளி இழப்பீடாக நேற்று வழங்கப்பட்டது.
பிகேஆர் உலு லங்காட் தொகுதி தலைவரும் உலுலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரியுமான ராஜன் முனுசாமி மற்றும் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ராமச்சந்திரன் அர்ச்சுனன் ஆகியோரின் தொடர் முயற்சியின் பலனாக
இத்தோட்டப் பாட்டாளிகளுக்கு இந்த இழப்பீடு பெற்றுத் தரப்பட்டது.
இத்தோட்டப் பாட்டாளிகள் இப்பகுதியில் நீண்ட காலம் வசித்து வருவதால் இவர்களுக்கு மேம்பாட்டாளரிடமிருந்து நியாயமான இழப்பீட்டை பெற்றுத் தருவதற்காக இவ்விருவரும் மேற்கொண்ட முயற்சிகள் இன்று வெற்றியைத் தந்துள்ளன.
இவர்களுக்கு சிலாங்கூர் கூ வீடமைப்பு திட்டத்தில் வீடுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ராஜன் கூறினார்.
தற்போது, ஜாலான் புரோகா கம்போங் முனியாண்டியாகத் திகழும் இப்பகுதியில் சமிக்ஞை விளக்கைப் பொருத்துவதற்கு போஸ்டிட் பாலாவ் மேம்பாட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்கள் அனைவரும் உரிய இழப்பீடு கோரி கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து போராடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. போஸ்டிட் பாலாவ் நிறுவன திட்டப் பிரிவு நிர்வாகி மேஜர் அட்னான் 5 குடும்பங்களுக்கு காசோலைகளை வழங்கினார்.
அந்த வகையில் முருகன், செல்வத்துரை, சக்திவேல், உலக நேசன், செம்பகலிங்கம் ஆகிய பாட்டாளிகள் தலா 50,000 வெள்ளி இழப்பீட்டு தொகைக்கான காசோலைகளை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
மேலும், இங்குள்ள மூன்று ஆலயங்களுக்கு 15,000 வெள்ளி ரொக்கத்தை இழப்பீடாக மேம்பாட்டு நிறுவனம் வழங்கியது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 40,000 வெள்ளியும் வாடகை வீட்டில் தங்குவதற்கு தலா 10,000 வெள்ளியும் வழங்குவதற்கு போஸ்டட் பாலாவ் மேம்பாட்டு நிறுவனம் முன்னதாக ஒப்புக் கொண்டது. இக்கூட்டத்தில் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் சந்திரன் ராமசாமி உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


