அலோர்ஸ்டார், செப். 19- கோல கெடா கடல் பகுதியில் வீசிய பலத்த
காற்றின் காரணமாக பேரலைகள் எழுந்ததால் லங்காவி-கோல கெடா
இடையிலான பத்து பெர்ரி சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இப்பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய
காற்று மற்றும் 3.5 மீட்டர் வரை எழுந்த அலைகள் காரணமாகக் கடந்த
மூன்று தினங்களாக தொடர்ச்சியாக அனைத்து பெர்ரி சேவைகளும் ரத்து
செய்யப்பட்டதாகப் பெர்ரிலைன்ஸ் வென்ஞ்சர்ஸ் சென். பெர்ஹாட்
நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கேப்டன் டாக்டர் பாஹ்ரின் பஹாரும்
கூறினார்.
பயணிகள் மற்றும் படகு சிப்பந்திகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால்
இன்றையப் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இன்று காலை 8.30 மணிக்கு 589 பயணிகளுடன் கோல கெடாவிலிருந்து
லங்காவி நோக்கி பயணமான படகு ஒன்று பாதியில் திரும்ப வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டது என்று அவர் சொன்னார்.
லங்காவி-கோல கெடா இடையிலான ஐந்து படகுக் சேவைகள் இன்று
ரத்து செய்யப்பட்டன. இதனால் 2,472 பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்று
அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அதே சமயம், லங்காவியிலிருந்து கோல கெடா வரும் ஐந்து பெர்ரி படகுச்
சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதனால் 1,041 பயணிகள் தங்கள்
பயணத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது என்றார் அவர்.
பெர்லிஸ் மாநிலத்தின் கோல பெர்லிஸ் வழியாக மாற்று பயணத்தை
மேற்கொள்ளப்படும். எனினும் கோல பெர்லிஸ் படகுத் துறையின்
கொள்ளளவு மற்றும் மலேசிய கடல் துறையின் அனுமதி ஆகியவற்றைப்
பொறுத்து இந்த பயணம் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும்
தெரிவித்தார்.


