(ஆர்.ராஜா)
ஷா ஆலம், செப். 19 - இளம் தலைமுறையினர் மத்தியில் சமய நெறியை
ஊட்டுவதில் அளப்பரிய பங்கினை ஆற்றி வரும் மலேசிய இந்து தர்ம
மாமன்றத்தின் பொறுப்பாளர்களை தாம் பெரிதும் பாராட்டுவதாகக் கிள்ளான்
நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.
இந்த சமயம் பற்றி தவறாக வியாக்கியானம் செய்யும் மற்றும்
பிரிவினையை ஏற்படுத்தும் தரப்பினரிடமிருந்து சமயத்தை காக்க
இளையோர் மத்தியில் சமய நெறிகள் போதிக்கப்படுவது அவசியம்
என்றும் அவர் வலியுறுத்தினார்.
மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் இங்குள்ள மிட்லண்ட்ஸ்
தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி
மாணவர்களுக்கான ஐந்து நாள் இந்து தர்ம அடிப்படை சமய வகுப்பினை
முடித்து வைக்கும் நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மக்களிடையே சமய விழிப்புணர்வு இருந்தால் நமது சமயத்தை யாராலும்
இழிவுபடுத்த முடியாது எனக் கூறிய அவர், சமய விழிப்புணர்வு
நிகழ்வுகளை ஆலயங்கள் அதிகளவில் நடத்த வேண்டும் என கோரிக்கை
விடுத்தார்.
தற்போது யாருடைய ஆலய கோபுரம் பெரிதாக இருக்கிறது? அழகாக
இருக்கிறது? என்ற போட்டி ஆலயங்கள் மத்தியில் நிலவுகிறது. அதேபோல்
ஆலயத்தில் மண்டபம் கட்டி வருமானம் தேடுவோரும் உள்ளனர்.
கோயில்களில் நிறைய பூஜைகளை செய்கிறார்கள். ஆனால், சமயத்தைப்
பாதுகாக்கவும் அடுத்த தலைமுறையினரும் இந்துக்களாக இருப்பதை உறுதி செய்யவும் எத்தனை ஆலயங்கள் முயற்சி செய்கின்றன என்பது கேள்விக்குறியாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
நாம் சமயத்தையும் மொழியையும் சரியாக புரிந்து கொள்ளாத காரணத்தால் சில விஷக்கிருமிகள் உள்ளே புகுந்து வியாக்கியானங்களைச் செய்யும் மற்றும் பிரிவினைகளை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்பிரச்சனைகளைக் களைய இந்து தர்ம மாமன்றத்தின் இந்த அடிப்படை சமய வகுப்பு நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்த திட்டத்தை முன்னெடுத்த மாமன்றத்தின் பொறுப்பாளர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய இந்து தர்ம் மாமன்றத்தின் தலைவர் இராதாகிருஷ்ணன், பள்ளிகளில் இந்து சமய அடிப்படை வகுப்புகளை நடத்துவது தங்களின் நீண்ட காலப் போராட்டமாக இருந்து வருவதாகக் கூறினார்.
இந்த முயற்சிக்கு நம்மவர்களும் முட்டுக்கட்டையாக இருப்பது வருத்தமளிப்பதாக இருந்தாலும் இந்த முயற்சியை மாமன்றம் எந்நிலையிலும் கைவிடாது என்றார்.


