கோலாலம்பூர், செப். 19 - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) தங்களுக்கு எதிராக நடத்தி வரும் விசாரணை பண்டோரா ஆவணங்கள் மற்றும் பனாமா ஆவணங்கள் தொடர்பானது அல்ல என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் மகன்களான மிர்ஸான் மற்றும் டான்ஸ்ரீ மொக்ஸானி ஆகியோர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
சொத்துகளை அறிவிக்கக் கோரும் எம்.ஏ.சி.சி.யின் உத்தரவு, டாக்டர் மகாதீருக்கு எதிராக தற்போது நடத்தப்பட்டு வரும் விசாரணையுடன் தொடர்புடையது என்று அச்சகோதரர்கள் கூறினார்.
எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியது போல் ஒரு நேர்மறையான தீர்மானத்தை உறுதிப்படுத்த நாங்கள் அந்த அமைப்புடன் முழுமையாக ஒத்துழைக்கிறோம் என்று அவர்கள் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.
அநத ஊழல் எதிர்ப்பு அமைப்பு நிர்ணயித்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மிர்சானும் மொக்ஸானியும் தங்கள் சொத்துக்களை அறிவித்ததை அஸாம் முன்னதாக உறுதிப்படுத்தியிருந்தார்.
சொத்துப் பிரகடனம் தொடர்பான கூடுதல் தகவல்களையும் விளக்கங்களையும் பெற எம்.ஏ.சி.சி. தற்போது அந்த சகோதரர்களின் வழக்கறிஞர்களுடன் தொடர்பு கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


