ஷா ஆலம், செப். 19 - மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார மையங்களில்
கண்காணிப்பு முறையை வலுப்படுத்துவதன் மூலம் எம்பாக்ஸ் எனப்படும்
குரங்கம்மை நோயை முன்கூட்டிய கண்டறியும் முயற்சிகளை மாநில
அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் இடைவிடாத விளக்கமளிப்பு அமர்வுகள்
மற்றும் தொடர்ச்சியான மருத்துவக் கல்வித் திட்டங்கள் வாயிலாக
இந்நோய் சார்ந்த மேலாண்மை முறையையும் தாங்கள் வலுப்படுத்தி
வருவதாகப் பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
மக்களிடையே இந்நோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும்
தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கும் மருத்துவக் கல்வித் திட்டத்தை
மாநில அரசு தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது என்று அவர்
தெரிவித்தார்.
குரங்கம்மை நோய் தொடர்பான சமீபத்திய தகவல்களை
ஒருமுகப்படுத்துவதற்கு ஏதுவாக மாநில பொது சுகாதார ஆட்சிக்குழு
மாநில சுகாதாரத் துறையுடன் அணுக்கமாகச் செயல்பட்டு வருகிறது.
இதுதவிர, அவசியம் ஏற்படும் பட்சத்தில் இந்நோய்ப் பரவலைக்
கட்டுப்படுத்துவதற்கான ஆக்ககரமானத் திட்டங்களையும் அது வரைந்து
வருகிறது என்றார் அவர்.
சருமத்தில் வேர்க்குரு, கொப்புளம் போன்ற அறிகுறிகள் தென்படும்
பட்சத்தில் உடனடியாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்படி பொது
மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
குரங்கம்மை நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் அல்லது அந்நோய்க்கான
அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுடன் தொடுதல் உள்ளிட்ட நெருங்கிய தொடர்புகளைத் தவிர்க்கும்படியும் அவர் வலியுறுத்தினார்.


