சிரம்பான், செப். 19 - சிரம்பான்-தம்பின் சாலையின் தாமான் பிடாரா
சமிக்ஞை விளக்கு பகுதியில் நேற்று நிகழ்ந்த பத்து வாகனங்கள்
சம்பந்தப்பட்ட விபத்தில் சம்பந்தப்பட்ட லோரியின் ஓட்டுநர்
மெத்தம்பெத்தமின் போதைப் பொருளை உட்கொண்டிருந்ததை
காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
அந்த 38 வயது ஓட்டுநரை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கான
நீதிமன்ற அனுமதி இன்று பெறப்படும் என சிரம்பான் மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி முகமது ஹாத்தா சே டின் கூறினார்.
அந்த ஆடவரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் அவர்
மெத்தம்பெத்தமின் போதைப் பொருளை பயன்படுத்தியிருந்தது உறுதி
செய்யப்பட்டது. இச்சம்பவத்திற்குப் பின்னர் அந்த ஆடவர் கைது
செய்யப்பட்டார் என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில்
தெரிவித்தார்.
நேற்று பிற்பகல் 1.25 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் 31 வயது
ஆடவர் ஒருவர் பலியானார். கற்களை ஏற்றி வந்த லோரி அவரின்
புரோட்டோன் ஈஸ்வரா காரை மோதியதில் அவர் காரின்
இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டார்.
வாகனங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த சமயம் தம்பினிலிருந்து
சிரம்பான் நோக்கி வந்து கொண்டிருந்த ஹீனோ ரக லோரி கட்டுப்பாட்டை
இழந்து அந்த வாகனங்களை மோதியது தொடக்க கட்ட விசாரணையில்
தெரிய வந்துள்ளதாக முகமது ஹாத்தா தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 44(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது என்ற அவர் குறிப்பிட்டார்.


