கோலாலம்பூர், செப்.18 - இன்று ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் சாலை விபத்தில் சிக்கிய இரு மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் பிரத்தியேக மருத்துவக் குழு உதவிக் கரம் நீட்டியது.
மருத்துவ உதவியாளர்கள் மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய அரச மருத்துவக் குழு பேரரசரின் பரிவாரத்துடன் விபத்து நடந்த அந்த இடத்தைக் கடந்து சென்றதாகப் பேரரசரின் முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்தை கண்டவுடன் மருத்துவர் உள்ளிட்ட அரச மருத்துவக் குழுவினர் வாகனத்தை நிறுத்தி இரு மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கும் அவசர மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக மாமன்னரின் தனிப்பட்ட ஆம்புலன்சில் கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று அந்த பதிவு கூறியது.
சுல்தான் இப்ராஹிமின் ஆம்புலன்ஸில் வென்டிலேட்டர் மற்றும் தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், அந்த ஆம்புலன்சில் தீக்காயங்கள் மற்றும் சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அடிப்படை உபகரணங்களும் உள்ளன.


