கோலாலம்பூர், செப். 18 - மலேசிய விவசாயம், தோட்டக்கலை மற்றும் வேளாண் சுற்றுலா கண்காட்சியின் (மஹா) ஏழாவது நாளான நேற்று வரை மொத்தம் 23 லட்சம் பார்வையாளர்களின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது.
செர்டாங்கில் உள்ள மலேசிய விவசாயக் கண்காட்சி பூங்காவில் (மேப்ஸ்)இம்மாதம் 11 முதல் 22 வரை நடைபெறும் மஹா 2024 கண்காட்சியில் முப்பது லட்சம் பார்வையாளர்களை ஈர்க்கும் இலக்கை அடைய முடியும் என்று கூட்டரசு சந்தை வாரியத்தின் (ஃபாமா) தலைமை இயக்குநர் அப்துல் ரஷிட் பாஹ்ரி நம்பிக்கை தெரிவித்தார்.
இதுவரை இதன் நேரடி விற்பனை மதிப்பு 1 கோடியே 73 லட்சம் வெள்ளியை எட்டியுள்ளது. மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக 310 கோடி வெள்ளி வர்த்தகம் பதிவாகியுள்ளது. நாம் நிர்ணயித்திருந்த வர்த்தக இலக்கு 60 லட்சம் வெள்ளியாகும் என அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு பெர்னாமா தொலைக்காட்சி ஒளிபரப்பான ருவாங் பிச்சாரா நிகழ்ச்சியில் பிரமுகராகக் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு கூறினார்.
மஹா கண்காட்சியின் முதல் மூன்று நாட்களில் மலேசியாவில் சாத்தியமான ஏற்றுமதியாளர்களைச் சந்திக்க வெளிநாட்டிலிருந்து 62 முதலீட்டாளர்களை தனது தரப்பு அழைத்து வந்ததாகவும், அந்த முயற்சியின் மூலம் 750 க்கும் மேற்பட்ட இணை வர்த்தகங்கள் வழி 66.2 கோடி வெள்ளி விற்பனைத் வாய்ப்புகள் பதிவானதாகவும் அப்துல் ரஷிட் கூறினார்.
பல மலேசிய தயாரிப்புகள் உண்மையில் வெளிநாட்டு சந்தைகளில் ஊடுருவ முடியும் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். ஆனால் சில நேரங்களில் அவற்றுக்கு வாய்ப்பு கிட்டுவதில்லை.
எனவே, அமைச்சு (விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு) வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்வோரை வரவழைத்து மலேசியாவில் சாத்தியமான ஏற்றுமதியாளர்களுடன் இணை வணிக வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று அவர் கூறினார்.


