கோத்தா கினபாலு, செப். 18 - பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம்
மக்களின் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு தொடர்பான சவால்களைச்
சமாளிப்பதற்கான வியூகங்கள் மீது 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்
திட்டத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தும்.
தமது தலைமையில் நேற்று இங்கு நடைபெற்ற சபா, சரவாக் மற்றும்
லவுவான் கூட்டரசு பிரதேசத்திற்கான விலை நிலைத்தன்மை
செயல்குழுவின் கூட்டத்தில் இவ்விவகாரத்தை தாம் முன்வைத்ததாகத்
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசுப் கூறினார்.
மக்களின் சுபிட்சத்தை உறுதி செய்வதில் மடாணி அரசாங்கத்தின் முக்கிய
இலக்கிற்கேற்ப பொருள் விலை மற்றும் சேவை கட்டண உயர்வை
நிலைப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு
வரும் என்று எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான
அவர் தெரிவித்தார்.
பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவதில் உதவக்கூடிய குறுகிய
கால, மத்திய கால அல்லது நீண்ட கால அடிப்படையிலான திட்டம்
ஏதும் இருப்பின் அதனை வரவேற்க தாம் தயாராக உள்ளதாக அவர்
குறிப்பிட்டார்.
நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் வாழ்க்கைச் செலவின
அதிகரிப்பினால் சிரமத்தை எதிர்நோக்கும் மக்களுக்கு பயனளிக்கும்
வகையில் அத்திட்டங்கள் அமைய வேண்டும் என்பதே நமது
எதிர்பார்ப்பாகும் என்றார் அவர்.
சபா, சரவாக் மற்றும் லவுவான் கூட்டரசு பிரதேசத்தில் உள்ள சில அரசு
துறைகளையும் இந்த செயல்குழுவில் இணைத்துக் கொள்ளும்படி அவர்
கேட்டுக் கொண்டார்.
கடந்த மார்ச் 7ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாவது
கூட்டத்திற்குப் பின்னர் நடைபெறும் இரண்டாவது கூட்டம் இதுவாகும்.


