கோலாலம்பூர், செப். 18 - ஒப் குளோபல் தொடர்பான மூன்று விசாரணை
அறிக்கைகளை காவல்துறை மேல் நடவடிகைக்காக சட்டத் துறைத்
தலைவர் அலுவலகத்திடம் தாக்கல் செய்யும் என்று தேசிய போலீஸ்
படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் கூறினார்.
அவை சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பில் இரு
குற்றப்பத்திரிகைகள் மற்றும் தண்டனைச் சட்டத்தின் 354வது பிரிவின் கீழ்
ஒரு விசாரணை அறிக்கை ஆகியவை ஆகும் எனக் கூறிய அவர், அவை யாவும் நெகிரி செம்பிலான் மாநிலத்தை உட்படுத்தியுள்ளன என தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பான முதல் கட்ட விசாரணையில் நெகிரி
செம்பிலானில் நான்கு விசாரணை அறிக்கைகள் மற்றும் சிலாங்கூரில்
ஆறு விசாரணை அறிக்கைகள் உள்பட மொத்தம் பத்து விசாரணை
அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.
இரண்டாம் கட்ட விசாரணையில் சிலாங்கூர், நெகிரி செம்பிலான்,
பெர்லிஸ், கோலாலம்பூர் ஆகிய நான்கு மாநில போலீஸ்
தலைமையகங்கள் சம்பந்தப்பட்ட 23 விசாரணை அறிக்கைகள்
திறக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
மேலும் விரிவான அளவில் விசாரணையை மேற்கொள்வதற்கு ஏதுவாக
கைது செய்யப்பட்டவர்களின் தடுப்புக் காவல் அனுமதியை நீட்டிப்பதற்கு
தாங்கள் அனுமதி கோரவுள்ளதாக ரசாருடின் தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் சிலாங்கூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 155
பேரின் தடுப்புக் காவல் இன்றுடன் முடிவுக்கு வரும் வேளையில் நெகிரி
செம்பிலான், நீலாயில் கைது செய்யப்பட்ட இருவரின் தடுப்புக் காவல்
அனுமதி நேற்றுடன் முடிவுக்கு வந்தது என்றார் அவர்.
இந்த வழக்கு விசாரணைக்காக மொத்தம் 740 பேரிடம் வாக்குமூலம் பதிவு
செய்யப்பட்டுள்ளது. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவர்களில் 30
புகார்தாரர்கள், 216 சாட்சிகள், 392 பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 102 சந்தேகப்
பேர்வழிகளும் அடங்குவர்.


