ஷா ஆலம், செப். 17- உள்நாட்டு ஆடவர் ஒருவர் எம்பாக்ஸ் கிளேட் 11 எனும் வகையைச் சேர்ந்த குரங்கம்மை நோயினால் புதிதாக பீடிக்கப்பட்டுள்ளதை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது.
அந்த நோயாளிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி காய்ச்சல், தொண்டை வலி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதோடு மறுநாள் உடலில் சொறியும் ஏற்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹசான் கூறினார்.
இந்த நோய் அறிகுறிகள் தென்படுவதற்கு 21 நாட்களுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட நபர் வெளிநாட்டிற்கு சென்று வந்துள்ளார். தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்த நபரின் உடல் நிலை சீராக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
அந்த நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாகக் கூறிய அவர், அவர்கள் அனைவரும் நடப்பு சீரான செயலாக்க நடைமுறைக்கு ஏற்ப (எஸ்.ஒ.பி.) கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றார்.
கடந்த மாதம் செயல்முறைப்படுத்தப்பட்ட தேசிய முன்னெச்சரிக்கை மற்றும் உடனடி நடவடிக்கை அறையின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்ட சந்தேகத்திற்குரிய 58 எம்பாக்ஸ் நோயாளிகளில் பட்டியலில் இந்நபரும் அடங்குவார் என அவர் சொன்னார்.
காய்ச்சல், சொறி, கொப்புளம் போன்ற அறிகுறிகளைக் கொண்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாகச் சென்று சிகிச்சைப் பெறும்படி அவர் ஆலோசனை கூறினார்.
கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கி மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து 10 குரங்கம்மை நோய்களும் கிளேட் 11 வகையைச் சேர்ந்தவையாகும் என அவர் குறிப்பிட்டார்.








