கோலாலம்பூர், செப். 15- பள்ளி வேனுக்காக காத்திருந்த ஒன்பது வயது மாணவி அடையாளம் தெரியாத பெண்ணின் கடத்தல் முயற்சியிலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பினார். இச்சம்பவம் புக்கிட் பெருந்தோங்கில் உள்ள வீடமைப்பு பகுதி ஒன்றில் நேற்று முன்தினம் நிகழ்ந்தது.
இந்த கடத்தல் முயற்சி தொடர்பில் சம்பந்தப்பட்ட மாணவியின் தாயாரிடமிருந்து அன்றைய தினம் இரவு 8 56 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக உலு சிலாங்கூர் மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் டி.எஸ்.பி. முகமது அஸ்ரி முகமது யூனுஸ் கூறினார்.
உள்நாட்டவரான அந்த சந்தேகத்திற்குரிய பெண் அச்சிறுமியைக் கடத்த முயன்றது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் அச்சிறுமி கூச்சலிட்டவாறு அருகிலுள்ள கடையை நோக்கி ஓடியதால் அப்பெண்ணின் முயற்சி தோல்வியடைந்தது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அந்தச் சிறுமியைக் காப்பாற்றினர். ஆயினும் அப்பெண் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார் என அவர் குறிப்பிட்டார்.
இந்த புகார் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 363வது பிரிவு மற்றும் 511வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.
சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமரா எதுவும் காணப்படவில்லை எனக் கூறிய அவர், அப்பெண் தனியாக இச்செயலில் ஈடுபட்டுள்ளார் என்றார்.


