புத்ராஜெயா, செப். 15- பூச்சோங்கில் சட்டவிரோத பொழுதுபோக்கு மையமாக மாற்றப்பட்ட வளாகத்தில் குடிநுழைவுத் துறையினர் நேற்று முன்தினம் நடத்திய அதிரடிச் சோதனையில் 16 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 25 முதல் 47 வயதுக்குட்பட்ட 13 நைஜீரிய நபர்கள், இரண்டு தாய்லாந்து பெண்கள் மற்றும் ஒரு உகாண்டா ஆடவரும் அடங்குவர் என்று அதன் தலைமை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ கூறினார்.
நாட்டில் தங்கியிருப்பதற்கான செலலத்தக்க ஆவணங்கள் அல்லது கடப்பிதழ்கள் இல்லாததால் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர் என அவர் சொன்னார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 1959/63 ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் 6(1)(சி) பிரிவின் கீழ் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜாலில் குடிநுழைவுத் துறையின் தடுப்புக் காவல் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வளாகம் வாடிக்கையாளர்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் மதுபானங்களை வழங்கி வந்ததாகக் கூறிய ரஸ்லின், சில வாடிக்கையாளர்கள் வெளிநாட்டு பெண்களை பணிப் பெண்களாக உடன் அழைத்து வந்துள்ளனர் என்றார்.
ஆப்பிரிக்கர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை இலக்காக கொண்ட இந்த வளாகம் இரவு 7 மணி முதல் அதிகாலை 2 மணி வரை செயல்பட்டு வந்துள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது.


