புத்ராஜெயா, செப் 14: செப்டம்பர் 1 முதல் 7 வரையிலான 36வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME28) டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தோடு (1,765) ஒப்பிடும்போது 1,870ஆக அதிகரித்துள்ளது. மேலும், இக்காலக்கட்டத்தில் ஒருவர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 82,485 டிங்கி சம்பவங்கள் பதிவான நிலையில்
இவ்வாண்டு அதன் எண்ணிக்கை 98,442ஆக உள்ளது என்று சுகாதார இயக்குநர்
ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.
இவ்வாண்டு 89 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2023 இல் 59 இறப்புகள்
மட்டுமே பதிவாகி இருந்தன என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
மேலும், தொற்றுநோயியல் 35வது வாரத்தில் 53 ஹாட்ஸ்பாட் இடங்கள்
பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார்.
அதாவது சிலாங்கூரில் 37 இடங்களும்,கோலாலம்பூர், புத்ராஜெயாவில் 6 இடங்களும், நெகிரி செம்பிலான், பேராக்கில் தலா 4 இடங்களும், கிளந்தானில் 2 இடங்களும் பதிவாகியுள்ளன.
– பெர்னாமா


