கிள்ளான், செப் 13- சிலாங்கூர் மாநில நில மற்றும் கனிம வளத் துறை
நேற்று முன்தினம் மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் சுமார்
10 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 480 டன் மணல் மற்றும் மண் பறிமுதல்
செய்யப்பட்டது.
கோலக் கிள்ளான் முதலாவது பிராந்திய கடல் போலீசாரின்
ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் 24
முதல் 55 வயது வரையிலான எட்டு லோரி ஓட்டுநர்களும் தடுத்து
வைக்கப்பட்டதாக அத்துறையின் இயக்குநர் டத்தோ டாக்டர் யூஸ்ரி
ஜக்காரியாக கூறினார்.
சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர், கிள்ளான், கோல லங்காட் மற்றும்
சிப்பாங் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 191 கிலோ மீட்டர்
கடலோரப் பகுதியை இந்த சோதனை நடவடிக்கை உள்ளடக்கியிருந்தாக
அவர் சொன்னார்.
செல்லத்தக்க ஆவணங்கள் இன்றி கல் சார்ந்த கனிமங்களை ஏற்றி வந்த
குற்றத்திற்காக எட்டு லோரிகளும் அதன் ஓட்டுநர்களும் தேசிய நிலச்
சட்டத்தின் 426வது பிரிவு மற்றும் 2000ஆம் ஆண்டு கனிமள சட்டம்
(சிலாங்கூர்) ஆகியவற்றின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதாக அவர்
குறிப்பிட்டார்.
கிள்ளான் மற்றும் கோல லங்காட்டில் ஆறு லோரிகள் தடுத்து
வைக்கப்பட்ட வேளையில் எஞ்சிய லோரிகள் நெகிரி செம்பிலான்
மாநிலத்தின் நீலாயில் பறிமுதல் செய்யப்பட்டன. சராசரி ஒரு டன் 35
வெள்ளி மதிப்பிலான 60 டன் மணல் அல்லது மண்ணை ஒவ்வொரு
லோரியும் ஏற்றி வந்ததாக மதிப்பிடப்படுகிறது என்று அவர் கூறினார்.
அந்த கனிமப் பொருள்கள் கட்டுமானத்திற்காக அல்லாமல் கடலோர நிலச்
சீராக்கப் பணிகளுக்காகக் கொண்டுச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது என்று
அவர் தெரிவித்தார்.
இந்த பறிமுதல் தொடர்பில் லோரி ஓட்டுநர்களிடம் விசாரணை
மேற்கொள்ளப்படும் என்பதோடு அதன் உரிமையாளர்களும் விசாரணைக்கு
அழைக்கப்படுவர் என்றார் அவர்.
மாநிலத்தின் மண்வளம் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்காக இத்தகைய
சோதனை நடவடிக்கைகளைத் தமது தரப்பு தொடர்ந்து மேற்கொள்ளும்
என்றும் அவர் கூறினார்.


