(ஆர்.ராஜா)
ஷா ஆலம், செப் 13- மேம்பாட்டுத் திட்டத்தினால் பாதிக்கப்படும் தோட்டத்
தொழிலாளர்களுக்கு உதவ சிறப்பு நிதி அல்லது வீடமைப்புத் திட்டம்
உருவாக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை தாம் மாநில அரசிடம்
முன்வைத்துள்ளதாகப் புக்கிட் மெலாவத்தி தொகுதி ஒருங்கிணைப்பாளர்
தீபன் சுப்பிரமணியம் கூறினார்.
இந்த பரிந்துரை, தோட்டம் மேம்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும்
பட்சத்தில் நெடுங்காலமாகப் பணிபுரிந்த தொழிலாளர்களுக்காகப்
பிரத்தியேக வீடமைப்புத் திட்டம் உருவாக்கப்படுவதோடு அவர்கள்
வங்கியில் கடனுதவி பெறுவதற்கான வசதிகளும் குறைந்தது 30
விழுக்காடு வரையிலான விலைச் சலுகையும் வழங்கப்பட வேண்டும்
என்ற கோரிக்கையையும் உள்ளடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில் அதிகமான தோட்டங்கள் மேம்பாடு காரணமாக
அடையாளத்தை இழந்து வருகின்றன. இதனால் பாதிக்கப்படும்
தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய
மாநில நிலையில் உறுதியாக கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும் என
விரும்புகிறோம். இதன் அடிப்படையில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரியுடம் இந்த விவகாரத்தை முன்வைத்துள்ளோம் என்று
சிலாங்கூர் இன்று இணைய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில்
அவர் சொன்னார்.
இனிமேல் தோட்டங்களில் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டங்களில் தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் கூ வீடுகள் ஒதுக்கப்படுவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறினார்.
வீடுகளை வாங்குவதில் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும்
சிக்கல்களை சமாளிக்க அரசாங்கம் கடனுதவித் திட்டத்தை அல்லது
வங்கிகள் வாயிலாக கடனுதவி பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித்
தர வேண்டும் என்ற பரிந்துரையும் மந்திரி புசாரிடம் முன்வைக்கப்படும்
என அவர் குறிப்பிட்டார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான பிரத்தியேக வீடமைப்புத் திட்டம்
அல்லது நிதி ஒதுக்கீட்டை மாநில அமல்படுத்த வேண்டும் என்ற
கோரிக்கையை அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான
கலந்துரையாடலில் தாம் மந்திரி புசாரிடம் முன்வைக்கவுள்ளதாக அவர்
சொன்னார்.
மாநிலத்தில் குறிப்பாகக் கோல சிலாங்கூரில் உள்ள தோட்டங்களில்
மேம்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் போது தோட்டத்
தொழிலாளர்களுக்காக சிறப்பு வீடமைப்புத் திட்டத்தை உருவாக்கும்
பரிந்துரையை தாம் மாவட்ட நடவடிக்கை குழு கூட்டத்தில்
முன்வைத்துள்ளதாகவும் அவர் சொன்னார்.


