ஜின்ஜூ செப். 13 - தென்சீனக் கடல் தொடர்பான எந்த விவகாரமும்
ஆசியான் அமைப்பின் வழி தொடர்ச்சியான முறையில் தீர்வு காணப்பட
வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின்
கூறினார்.
தென்சீனக் கடல் சுயேச்சையான கடல் மார்க்கம் என்பதால் அதில் அந்நிய
நாட்டுக் கப்பல்கள் பயணிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆயினும்,
அக்கப்பல்கள் கடல் பகுதியில் நின்றால் மட்டுமே சிக்கல் ஏற்படும் என்று
அவர் சொன்னார்.
தென் சீனக் கடல் சுயேச்சையான கடல் பகுதியாக இருப்பதால் அங்கு
அந்நிய நாட்டுக் கப்பல்களின் வருகையை அத்துமீறலாகக் கருத முடியாது.
எனினும் அந்த கப்பல்களின் வருகை அத்துமீறில் வடிவில் இருப்பதாக
நாம் கருதினால் அக்கப்பல்களின் வருகைக்கு எதிராக ஆட்சேபக் குறிப்பை
சீனா உள்பட சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்புவோம் என்று அவர்
குறிப்பிட்டார்.
கொரிய வான் போக்குவரத்து தொழில்துறைக்கு பணி நிமித்த வருகை
மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு சொன்னார்.
இவ்வாண்டு தொடங்கி தென்சீனக் கடல் பகுதியில் சீன நாட்டு இராணுவ
மற்றும் கடலோர காவல் படையினரின் வருகை அதிகரித்துள்ளதாக
அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதன் விளைவாக சீன கடலோரக் காவல் படையினருக்கும் பிலிப்பைன்ஸ்
தரப்புக்கும் இடையே சிறிய மோதல்கள் ஏற்பட்டன. இச்சம்பவம்
அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகள்
காணப்பட்டால் அனைத்துலக சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப அரசாங்கம்
நடவடிக்கை எடுக்கும் என்று ஹசான் தெரிவித்தார்.


