பேங்காக், செப். 12 – தாய்லாந்திலுள்ள இரு வட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்ததால் குடியிருப்பு பகுதிகள் நீரில்
மூழ்கியதோடு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இந்த பேரிடரில் இதுவரை
குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதோடு மேலும் நூற்றுக்கணக்கானோர் சிக்கித்
தவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாண்டு ஆசியாவை உலுக்கிய மிக சக்திவாய்ந்த புயலான யாகி சூறாவளியைத்
தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாதகமான வானிலை தாய்லாந்தில் சுமார் 9,000 குடும்பங்களை
பாதித்துள்ளது என்று பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா கூறினார்.
நீரோட்டம் இன்னும் வலுவாக உள்ளது. அனைத்து அரசாங்க ஏஜென்சிகளும் தயார்
நிலையில் உள்ளன. தற்போதைய வலுவான நீரோட்டம் தணியும் போது, அவர்கள்
உடனடியாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வார்கள் என்று அவர்
செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
புயலின் தாக்கம் காரணமாக வியட்னாமில் குறைந்தது 143 பேர்
கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று புயல் மேற்கு நோக்கி நகர்ந்த
நிலையில் புயலின் தாக்கம் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது. வெள்ள அபாயம்
காரணமாக தலைநகர் ஹனோயில் பெருகிய சிவப்பு நதிக்கு அருகில் வசிக்கும்
ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சியாங் மாய் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் இரு
மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக அம்மாநில கவர்னர் தெரிவித்தார்.
மியான்மரின் எல்லையை ஒட்டிய அண்டை நாடான சியாங் ராய் மாநிலத்தின் மாய்
சாய்யில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை படகுகள் அடைய முடியாத நிலையில்
நூற்றுக்கணக்கானோர் உதவிக்காகக் காத்திருக்கின்றனர் என்று மாவட்டத் தலைவர்
நரோங்போல் கிட்-ஆன் தெரிவித்தார்.
வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் குடியிருப்பாளர்களை வெளியேற்றவும்
அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்கவும் ஹெலிகாப்டர்கள்
பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார் .


