பாடாங் பெசார், செப்.12 - பாடாங் பெசார் குடிதுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தின் வழியாக 23 லட்சத்து 46 ஆயிரத்து 208 வெள்ளி மதிப்புள்ள 73,319 கிலோ ஷாபுவை நாட்டிற்கு கடத்தும் முயற்சியை பெர்லிஸ் அரச மலேசிய சுங்கத் துறை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
இம்மாதம் 3ஆம் தேதி 8.15 மணியளவில் அந்த வளாகத்தில் உள்ள இறக்குமதி தடத்தில் சிறப்பு பயணிகள் ஆய்வுப் பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தாய்லாந்து பதிவு எண் கொண்ட இஸூசு வாகனத்திலிருந்து அந்த போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக பெர்லிஸ் சுங்கத் துறை இயக்குநர் இஸ்மாயில் ஹாஷிம் கூறினார்.
பணியில் இருந்த அதிகாரிகள் அந்த வாகனத்தை சோதனையிட்டுக் கொண்டிருந்த போது தாய்லாந்து நாட்டவர் என நம்பப்படும் அடையாளம் தெரியாத அதன் ஓட்டுநர் அதிகாரிகளின் பார்வையிலிருந்து தப்பியதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த வாகனத்தை முழுமையாக ஆய்வு செய்வதற்காக பாடாங் பெசார் அமலாக்கப் பிரிவின் சுங்க அதிகாரிகளின் குழு அழைக்கப்பட்டது. அச்சோதனையில் வாகனத்தின் பின்புற பயணிகள் இருக்கையின் கீழ் ஒரு சிறப்பு பெட்டியில் "குவான்யின்வாங்" என்று எழுதப்பட்ட 56 சீன தேநீர் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பின்புற பயணிகள் இருக்கையின் தரையில் மாற்றியமைக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு சிறப்பு பெட்டியில் 14 கருப்பு பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. மேலும் ஆய்வு செய்யப்பட்ட போது அனைத்து சீன தேநீர் பாக்கெட்டுகளிலும் “குவான்யின்வாங்” என்று எழுதப்பட்டிருப்பதும் அந்த கருப்பு பொட்டலங்களில் மெத்தம்பெட்டமைன் (ஷாபு) இருப்பதும் கண்டறியப்பட்டது என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக இஸ்மாயில் கூறினார்.


