கோலாலம்பூர, செப். 12- செராஸ் மற்றும் சிகாம்புட்டில் உள்ள ஆடம்பர
அடுக்குமாடி குடியிருப்புகளில் காவல் துறையினர் கடந்த வாரம்
வியாழக்கிழமை நடத்திய சோதனைகளில் வேலையில்லா ஆடவர்
ஒருவர் கைது செய்யப்பட்டதோடு அவரிடமிருந்து 203,632 வெள்ளி
மதிப்புள்ள 65.6 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
முப்பது வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் செராஸில் இரவு மணி 9.00
அளவில் கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர்
ஏசிபி ரவீந்தர் சிங் சர்பான் சிங் கூறினார்.
அந்த ஆடவர் கொடுத்த தகவலின் பேரில் அடுக்குமாடி குடியிருப்பு
ஒன்றைச் சோதனையிட்ட போலீசார், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த
62.56 கிலோ கஞ்சா மற்றும் பெரேடுவா அக்ஸியா கார், 100 வெள்ளி
ரொக்கம் ஆகியவற்றை தாங்கள் பறிமுதல் செய்ததாக அவர் சொன்னார்.
சிகாம்புட்டில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்
மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனை நடவடிக்கையில் 3.1 கிலோ
கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் எடை கருவி, கஞ்சாவை பொட்டலமிட
பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சீல் வைக்கும் சாதனம் உள்ளிட்ட
பொருள்கள் அங்கிருந்து மீட்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
தலைநகரில் உள்ள உள்நாட்டு ஆடவரிடம் அந்த போதைப் பொருளை
வாங்கி அதனை ஐந்து கிராம் முதல் ஒரு கிலோ வரை பொட்டலமிட்டு
வாடிக்கையாளர்களுக்கு அச்சந்தேகப் பேர்வழி விநியோகித்து வந்துள்ளார்
என நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர்
குறிப்பிட்டார்.
இந்த போதைப் பொருளை 131,370 போதைப் பித்தர்கள் பயன்படுத்த
முடியும் எனக் கூறிய அவர், சந்தேக நபருக்கு போதைப் பொருளை
விநியோகித்த நபரைத் தாங்கள் தேடி வருவதாகச் சொன்னார்.
இந்த சம்பவம் தொடர்பில் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள்
சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணக்காக அந்த ஆடவர் தடுத்து
வைக்கப்பட்டுள்ளார் என்றார் அவர்.


