புத்ராஜெயா, செப். 11- மொத்தம் 23 கோடியே 25 லட்சம் வெள்ளி
சம்பந்தப்பட்ட நான்கு அதிகாரத் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை நிலை
நிறுத்தும் முந்தைய மேல் முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முடிவை
மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹிடின் யாசின்
செய்து கொண்ட மனுவை இங்குள்ள மேல் முறையீட்டு நீதிமன்றம்
தள்ளுபடி செய்தது.
நீதிபதி டத்தோ அஜிசா நவாவி தலைமையிலான ஐவர் கொண்ட
நீதிபதிகள் குழு இந்த தீர்ப்பை ஏகமனதாக வழங்கியது. அரசுத் தரப்பின்
மேல் முறையீட்டைச் செவிமடுத்து தீர்ப்பினை வழங்குவதற்கு
தேவையான அதிகார வரம்பு முந்தைய நீதிபதிகள் குழுவுக்கு உள்ளதாக
அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆகவே, முடிவை மறு ஆய்வு செய்யக்கோரும் மனு தள்ளுபடி
செய்யப்படுகிறது என்று நீதிபதி அஜிசா தனது தீர்ப்பில் கூறினார்.
கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெறும் அதிகாரத்
துஷ்பிரயோகம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளை மொகிடின்
எதிர்கொள்ள வேண்டிய சூழலை இந்த தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதி டத்தோஸ்ரீ அஜிசாவுடன் டத்தோ சே முகமது ருசிமா கசாலி,
டத்தோ அகமது ஜைடி இப்ராஹிம், டத்தோ அஸ்மான் அப்துல்லா, டத்தோ
அஸ்ஹாரி கமால் ரம்லி ஆகிய நீதிபதிகள் இந்த வழக்கைச்
செவிமடுத்தனர்.
பிரதமர் மற்றும் பெர்சத்து கட்சியின் தலைவர் பதவியைப் பயன்படுத்தி
தனது அரசியல் கட்சிக்காகப் புக்ஹாரி சென். பெர்ஹாட், நெப்டுரிஸ் சென்.
பெர்ஹாட் மற்றும் டத்தோ அஸ்மான் யூசுப்பிடமிருந்து 23 கோடியே 25
லட்சம் வெள்ளியை கையூட்டாகப் பெற்றதாக மொகிடின் மீது
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


