கோலாலம்பூர், செப். 11- மாநில காவல்துறைத் தலைவர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) நேற்று கைது செய்ததாக வெளிவந்த தகவலை அரச மலேசிய போலீஸ் படை (பி.டி.ஆர்.எம்.) மறுத்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்பது எம்.ஏ.சி.சி.யிடம் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு தெரியவந்ததாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் கூறினார்.
மாநில காவல்துறை தலைவர் சம்பந்தப்பட்ட எந்த கைது நடவடிக்கையும் எம்.ஏ.சி.சி.யால் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே, அச்செய்தியில் உண்மையில்லை என்று அவர் தெரிவித்தார்
போலீஸ் படையின் தோற்றத்தைப் பாதிக்கக்கூடிய தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் ரஸாருடின் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
இதற்கிடையில், எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கியும் மாநில காவல்துறைத் தலைவர் சம்பந்தப்பட்ட கைது நடவடிக்கையை மறுத்ததோடு அச்செய்தி தவறானது என்று குறிப்பிட்டார்.
மேலும், நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் டத்தோ அகமது ஜாஃபிர் முகமது யூசோப்பும் இந்த விஷயத்தை மறுத்தார்.
இது தவறான செய்தி. இது மட்டுமின்றி இன்னும் பல தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் வெளிவருகின்றன என்று அவர் சொன்னார்.
முன்னதாக எம்.ஏ.சி.சி.யால் மாநில காவல்துறை தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டது மற்றும் அவரிடம் 40 லட்சம் வெள்ளி ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான செய்தி டெலிகிராம் செயலியில் பரவியது.


