ஷா ஆலம், செப். 10 - நான்காவது சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சி (எஸ் ஏ.எஸ். 2024) எதிர்வரும் 12 முதல் 14 வரை நடைபெறும். இந்தக் கண்காட்சி சுமார் 32,874 பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிலாங்கூர் ஸ்கைபார்க் ரீஜினல் ஏவியேஷன் சென்டரில் நடைபெறும் இந்த கண்காட்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி முதல் பொதுமக்களுக்குத் திறக்கப்படும் என்று அதன் ஏற்பாட்டாளரான இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் கூறியது.
அதேசமயம் சனிக்கிழமையன்று காலை 10 மணி தொடங்கி நாள் முழுவதும் கண்காட்சியை காண்பதற்குரிய வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாண்டு நிகழ்ச்சி ஒரு கண்கவர் நிகழ்வாக இருக்கும். இதில் 35 நாடுகளின் பங்கேற்கும் வேளையில் பல்வேறு ரகங்களிலான 49 விமானங்கள் காட்சிக்கு வைக்கப்படும் என்று இன்வெஸ்ட் சிலாங்கூர் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
கண்காட்சி வளாகத்தில் வாகன நிறுத்துமிட வசதி இருக்காது என்பதால் பார்வையாளர்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு அந்த அரசு நிறுவனம் கேட்டுக் கொண்டது.
ஷா ஆலம் ஸ்டேடியத்தில் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதியில் வாகனங்களை நிறுத்த பார்வையாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அது கூறியது.
வாகனத்தை நிறுத்தியவுடன் பார்வையாளர்கள் வழிகாட்டியைப் பின்பற்றி காத்திருப்பு மண்டல பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கு பிரத்தியேகப் பேருந்து பார்வையாளர்களை ஸ்டேடியம் ஷா ஆலமிலிருந்து ஸ்கைபார்க் மையத்திற்குக் கொண்டு செல்லும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.


