(ஆர்.ராஜா)
ஷா ஆலம், செப். 10 - தேசிய தினத்தை முன்னிட்டு கோத்தா கெமுனிங்
தொகுதி ஏற்பாட்டில் ‘நாளையத் தலைவர்கள்‘ எனும் தலைப்பில்
மாணவர்களுக்கான பேச்சுப் பேட்டி அண்மையில் வெகு சிறப்பான
முறையில் நடைபெற்றது.
‘மலேசியா எனது நாடு‘ எனும் கருப்பொருளைக் கொண்ட இந்த பேச்சுப்
போட்டியை பால்சான்ஸ் இவெண்ட் அண்ட் புரொடாக்சன்ஸ் நிறுவனத்தின்
ஒத்துழைப்புடன் தொகுதி சேவை மையம் நடத்தியது.
இது முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேச்சுப் போட்டி
ஆரம்பப் பள்ளி 1, ஆரம்பப் பள்ளி 2 மற்றும் இடைநிலைப்பள்ளி என
மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. 5 முதல் 17 வயது வரையிலான
மாணவர்களை இலக்காகக் கொண்ட இந்தப் போட்டியில் 60 மாணவர்கள்
பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் அதே வேளையில்
அவர்கள் மத்தியில் நாட்டுப் பற்றையும் விதைக்கும் நோக்கில் இந்த
பேச்சுப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கோத்தா கெமுனிங் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் கூறினார்.
இந்த பேட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும்
உற்சாகத்துடனும் நாட்டுப் பற்று தொடர்பான தங்களின் கருத்துகளை
முன்வைத்தது பெரிதும் போற்றத்தக்க வகையில் இருந்தது என்று அவர்
சொன்னார்.
ஒவ்வொரு மாணவரும் தங்கள் பேச்சில் தலைமைத்துவ பண்புகளையும்
தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தியதோடு அவர்களின் மொழியாற்றல்
பிரமிக்கத்தக்க வகையிலும் இருந்தது என்றார் அவர்.
தமிழ், மலாய், ஆங்கில மொழியில் நடத்தப்பட்ட இந்த போட்டியில்
மூவின மாணவர்களும் பங்கு கொண்டு தங்களின் பேச்சாற்றலைப்
புலப்படுத்தினர். இந்நிகழ்வில் பெற்றோர்களும் கலந்து கொண்டு தங்கள்
பிள்ளைகளுக்கு உற்சாகத்தை அளித்தது மகிழ்ச்சியளிக்கும் வகையில்
உள்ளது என்றார் அவர்.


