(ஆர்.ராஜா)
கோல சிலாங்கூர், செப். 10 - சிலாங்கூர் தொழிலாளர் திறன் மேம்பாட்டுப்
பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பழுதுபார்ப்பு
மற்றும் சர்வீஸ் பயிற்சியில் 60 இளைஞர்கள் பங்கேற்றனர்.
இளைஞர்கள் மத்தியில் தொழில் திறன் ஆற்றலை மேம்படுத்தி அவர்கள்
மோட்டார் சைக்கிள் பழுதுபார்ப்புத் துறையில் வெற்றிகரமாகச்
செயல்படுவதை உறுதி செய்யும் நோக்கிலான இந்த பயிற்சித் திட்டத்தை
அருலேஷ் எண்டர்பிரைஸ் மற்றும் எஸ்.டி.டி.சி. எனப்படும் சிலாங்கூர்
தொழில்திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ஒத்துழைப்புடன் யு.பி.பி.எஸ்.
மேற்கொண்டது.
மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் வீ.பாப்பாராய்டு இந்த பயிற்சித் திட்டத்தை முடித்து வைத்து
மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்தப் பயிற்சியில் கலந்து
கொண்டவர்களில் கணிசமானோர் இந்திய மாணவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாப்பாராய்டு, இந்த பயிற்சி சம்பந்தப்பட்ட
மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பெரிதும் உதவும் என
நம்பிக்கைத் தெரிவித்தார்.
தொழில்நுட்ப மற்றும் தொழில் திறன் கல்வியின் வாயிலாக இளம்
தலைமுறையினரின் ஆற்றலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட
சிலாங்கூர் இளைஞர் மேம்பாட்டு முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இந்த
பயிற்சித் திட்டம் விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலச் சவால்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக இளைஞர்கள்
தொழில்திறன் பயிற்சிகளை பெற்றிருப்பது அவசியம் என்றும் அவர்
வலியுறுத்தினார்.
வாகனத் தொழில்துறையில் அதிகமான வேலை வாய்ப்புகள் உள்ளதால்
இத்தகையப் பயிற்சித் திட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் எனத்
தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் எஸ்.டி.டி.சி. தலைமை நிர்வாக அதிகாரி முகமது ரம்லி,
கோல சிலாங்கூர் துணை மாவட்ட அதிகாரி முத்தியா ஹுட், புக்கிட்
மெலாவாத்தி தொகுதி ஒருங்கிணைப்பாளர் தீபன் சுப்பிரமணியம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


