கூச்சிங், செப். 10 - முந்தைய மலைச்சாரல் கொள்கை கடந்த ஆண்டு காலாவதியான நிலையில் அதற்கு பதிலாகப் புதியக் கொள்கையை உருவாக்கும் பணியில் பொதுப்பணி அமைச்சு ஈடுபட்டு வருகிறது என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
நிலச்சரிவு போன்ற சம்பவங்களைக் குறைப்பதற்கான தற்போதைய மேம்பாடுகள் மற்றும் முனைப்பான நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த புதியக் கொள்கையை இவ்வாண்டு தொடங்கி எதிர்வரும் 2035 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
மலைச் சாரல் மீதான தேசிய கொள்கையை நாம் கொண்டிருக்க வேண்டும். பின்விளைவுகள் மிகவும் பாதகமானவை என்பதால் நாம் அதை இலகுவாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இதனால் சொத்துகள் பாதிக்கப்படலாம், உயிர்களும் பலியாகலாம் என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
மலேசிய தேசிய ஆவணக் காப்பகத்தின் ஏற்பாட்டில் இங்குள்ள டாயாக் கலாச்சார அறக்கட்டளை கட்டிடத்தில் நடைபெற்ற “மாநிலங்களை நினைவு கூர்தல்: துன் டத்தோ பாத்திங்கி தெமெங்காங் ஜூகா அனாக் பாரியங்கை நினைவு கூர்தல்” என்ற கருப்பொருளிலான நிகழ்வில் அவர் முன்னதாக கலந்து கொண்டார்.
நாடு முழுவதும் 1,000 க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய மலைச்சாரல்களை அமைச்சு கண்டறிந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நில நகர்வைக் கண்காணிக்க கருவிகளை பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நந்தா லிங்கி தெரிவித்தார்.


