செர்டாங், செப். 10 - இம்மாதம் 11 முதல் 22 வரை மேப்ஸ் எனப்படும் மலேசிய விவசாய கண்காட்சி பூங்காவில் நடைபெறவிருக்கும் வேளாண், தோட்டக்கலை மற்றும் விவசாய சுற்றுலா கண்காட்சியில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷியா உள்ளிட்ட 16 நாடுகள்
பங்கேற்கவிருக்கின்றன.
ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளும் இதர நாடுகளில் தாய்லாந்து, புருண, இந்தோனேசியா, ஹாங்காங் ஆகியவையும் அடங்கும் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு கூறினார்.
இந்த கண்காட்சியில் பங்கேற்கும் கண்காட்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் தொழில்நுட்பங்கள் உள்பட விவசாயம் சார்ந்த பொருள்கள் மற்றும் சாதனங்களை காட்சிக்கு வைப்பர் என்று அவர் தெரிவித்தார்.
இளைஞர்களை விவசாயத்தின் மீது ஈர்க்கக்கூடிய ஒரு களமாக இந்த மஹா கண்காட்சி விளங்குவதை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம். இதன் மூலம் விவசாயம் உயர் வருமானத்தை ஈட்டித் தரும் என்பதை அவர்களுக்கு உணர்த்தவும் விரும்புகிறோம் என்றார் அவர்.
நேற்று இங்குள்ள மேப்ஸ் மையத்தில் மஹா கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மஹா 2024 கண்காட்சிக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாகக் கூறிய முகமது சாபு, இந்த திட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது என்றார்.
இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகள் 90 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ள வேளையில் இன்று தொடங்கி வருகையாளர்கள் வரத் தொடங்குவர் என எதிர்பார்க்கிறோம். எஞ்சிய தினங்களில் 24 மணி நேரமும் செயல்பட்டு ஏற்பாடுகள் முழுமையாக இருப்பதை உறுதி செய்வோம் என்று அவர் சொன்னார்.


