விளாடிவோஸ்டோக், (ரஷ்யா) செப். 6 - மலேசியாவுக்கு வரும் ரஷ்ய நிறுவனங்களின் எண்ணிக்கையும் இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என தாங்கள் நம்புவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ரஷ்யாவைப் பொறுத்தவரை சாத்தியம் இருப்பதாக நான் நினைக்கிறேன். நாங்கள் ரஷ்யாவில் உள்ள பல பெரிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். மலேசியாவிற்கான அவர்களின் வருகை குறிப்பாக, சுற்றுலாத் துறையில் அதிகரிக்கும் என நம்புகிறோம் என்று ஆர்.ஐ.ஏ. நோவோஸ்டி மற்றும் ஆர்.டி. ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டதாக ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.
மலேசிய சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவுக்குச் செல்வதை நாங்கள் எளிதாக்குகிறோம் என்று கிழக்குப் பொருளாதார மன்ற ஆய்வரங்கின் இடைவேளையில் அன்வார் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த ஆய்வரங்கு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. ரஷ்யாவின் பசிபிக் கடற்கரை நகரமான விளாடிவோஸ்டாக்கில் உள்ள தூர கிழக்கு கூட்டரசு பல்கலைக்கழகத்தால் இந்த ஆய்வரங்கு நடத்தப்படுகிறது.
ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவுடனான ஒத்துழைப்பு மலேசியாவின் பொருளாதாரத்திற்கு பெரும் பயனளிக்கும் என்று அன்வார் தெரிவித்தார்.
மலேசியாவுடன் முதலீடு மற்றும் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்காவுடன் இந்த விவகாரம் மையம் கொண்டுள்ளது. ஐரோப்பா, குறிப்பாக ஜெர்மனி மற்றும் இப்போது சீனா, இந்தியா மற்றும் ரஷ்யாவுடனான ஒத்துழைப்பு எங்களுக்கு பயனளிக்கும் என்றார் அவர்.
இதற்கிடையில், இலக்கியங்கள் மூலம் மட்டுமே ரஷ்யாவை அறிந்திருந்த தமக்கு இந்த முதல் ரஷ்யா பயணம் உற்சாகத்தைத் தருவதாகக் கூறிய பிரதமர், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் மாஸ்கோவிற்குச் செல்ல விரும்புவதாகக் கூறினார்.


