விளாடிவோஸ்டோக், செப். 6 - அமெரிக்கா மற்றும் சீனா இடையே
அதிகரித்து வரும் பதற்றம் குறித்து மலேசியா கவலையடைந்துள்ளது.
எனினும், எந்த தரப்புக்கு ஆதரவு தருவது என்பது தொடர்பான
நிலைப்பாட்டை எடுக்க நாட்டை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்று
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அமெரிக்கா, சீனா இடையே அதிகரித்து வரும் பதற்றம் குறித்த கவலை
உள்ளது. ஆனால், எந்த தரப்புக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை
எடுக்கும்படி எங்களை வற்புறுத்த முடியாது என்று ரஷ்ய ஊடகங்களுக்கு
வழங்கிய பேட்டியில் அவர் கூறியதாக ஸ்புட்னிக் செய்தி
வெளியிட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் முதலீட்டைப் பொறுத்த வரை நாம் அமெரிக்காவின்
முக்கிய பங்காளியாக இருந்து வருகிறோம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்
முதலாவது இடத்தில் இருக்கிறோம். ஆகவே, அனைத்து துறைகளிலும்
முன்பை விட விரிவான அளவில் தொடர்புகளை வலுப்படுத்தி
வருகிறோம் என்று அவர் சொன்னார்.
மலேசியா அனைத்துத் தரப்பினருடன் நல்லுறவைப் பேணி வருவதால்
மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாகவும் ரஷ்யாவுக்கு எதிராகவும்
செயல்படுவதில் நாட்டிற்கு நாட்டமில்லை என்பதோடு இந்த விஷயத்தை
மேலும் குழப்பவும் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.
தீர்வு காண்பதுதான் எங்களின் நோக்கமும் நிலைப்பாடும் ஆகும்.
ரஷ்யாவுக்கு எதிராக மேற்கு நாடுகளுக்கு ஆதரவளிப்பதல்ல. இவ்வாறு
செய்வதால் எங்களுக்கு என்ன நன்மை கிட்டப் போகிறது? என்று அவர்
வினவினார்.
அமெரிக்காவைப் போலவே சீனாவுடனும் நாங்கள் அணுக்கமான
நட்புறவைப் பேணி வருகிறோம். ஒரு தரப்புக்கு ஆதரவளிக்க நீங்கள் ஏன்
வற்புறுத்துகிறீர்கள்? என்றார் அவர்.


