பாரிஸ், செப். 6 - எதிர்வரும் 2027ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தென்கிழக்காசியப் போட்டியின் (சீ போட்டி) இணை ஏற்பாட்டாளராக ஆகும் முடிவை சபா மாநிலம் மறுபரிசீலனை செய்தாலும் ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அப்போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன.
இப்போட்டியின் இணை ஏற்பாட்டாளர்களாக இருப்பதற்கு சரவா மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்கள் காட்டி வரும் வலுவான கடப்பாட்டின் அடிப்படையில் தேசிய விளையாட்டு மன்றம் (என்.எஸ்.சி.) இதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறது என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ கூறினார்.
சபா அமைச்சரவையின் அண்மைய முடிவு தொடர்பில் தாம் பதிலளித்துள்ள வேளையில் அதன் முடிவை தாம் மதிப்பதாக அவர் சொன்னார்.
சபா மாநிலத்தின் முடிவை நாம் மதிக்கிறோம். அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில் 2027 சீ போட்டிக்கான ஏற்பாடுகளை தேசிய விளையாட்டு மன்றம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள பாரிஸ் டி லா டிபென்ஸ் அரேனாவில் நேற்று நடைபெற்ற பாராலிம்பிக் 2024 50 மீட்டர் நீச்சல் போட்டியின் இறுதி ஆட்டத்தைக் கண்டு களித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சுமார் 70 கோடி வெள்ளி செலவிலான 20217 சீ போட்டியை கோலாலம்பூருடன் இணைந்து நடத்துவதற்கு சரவா, சபா மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக ஹன்னா இயோ கடந்த வாரம் கூறியிருந்தார்.
எனினும், 2027 சீ போட்டி தொடர்பில் சபா மாநிலம் நிதி ரீதியான எந்த கடப்பாட்டையும் வழங்கவில்லை என்பதோடு இப்போட்டியின் இணை ஏற்பாட்டாளர் பொறுப்பை வகிக்கும் முடிவையும் மறுபரிசீலனை செய்து வருவதாக சபா நிதியமைச்சர் டத்தோஸ்ரீ மஸ்சிடி மன்ஜூன் அண்மையில் கூறியிருந்தார்.


