ஜோகூர் பாரு, செப் 6 - மலேசியாவில் அடையாளம் காணப்பட்ட எம்பாக்ஸ்
எனப்படும் குரங்கம்மை வைரஸ் என சந்தேகிக்கப்படும் 46 சம்பவங்கள்
சோதனையில் எதிர்மறையான முடிவைத் தந்துள்ளதாக சுகாதார
அமைச்சு கூறியது.
தற்போது நாட்டில் எம்பாக்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை 9 பேராக தொடர்ந்து இருந்து வரும் வேளையில் அந்த நோய்
பீடிப்பு சம்பவங்கள் அனைத்தும் கடந்தாண்டு இறுதியில் பதிவு
செய்யப்பட்டன என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி
அகமது கூறினார்.
கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் முதல் நாட்டின் நுழைவாயில்களில் 52
லட்சம் சுற்றுப்பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று
அவர் சொன்னார்.
ஆகக் கடைசியாக அதாவது கடந்தாண்டு டிசம்பர் மாதம் நாம் கிளேட் 11
வகை திரிபுகளை (ஒன்பது சம்பவங்கள்) கண்டறிந்தோம். அவை மிகவும்
ஆபத்தான கிளேட் 1 பிரிவைச் சேர்ந்தவை அல்ல என்ற அவர்
குறிப்பிட்டார்.
இங்குள்ள ஜாலான் டோபியில் சுத்தமான, புகையில்லா வளாகம் என்ற
நடைப்பயண இயக்கத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் இதனைக் கூறினார்.
எம்பாக்ஸ் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விமான
நிலையங்கள் உள்பட நாட்டின் எல்லையில் உள்ள அனைத்து
நுழைவாயில்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய அவர்.
இருப்பினும், இதனால் பயணத் தாமதம் ஏதும் ஏற்படவில்லை என்றார்.
தரை, கடல், ஆகாயம் மற்றும் அனைத்துலக விமான நிலையங்களில்
நாம் பாதுகாப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருவோம். இதனால்
பயணத்தில் எந்த தாமதமும் ஏற்படவில்லை. இந்நோக்கத்திற்கு நாம்
நடமாடும் ஸ்கேனர் கருவியைப் பயன்படுத்துகிறோம். ஆகவே,
தொழில்நுட்ப ரீதியாகப் பயணத்தில் பாதிப்பு அல்லது இடையூறு
ஏற்பட்டத்தை நான் இதுவரை காணவில்லை என்றார் அவர்.


