சுபாங் ஜெயா, நவ. 6 - மாநில அரசின் ஏற்பாட்டிலான 2025 சிலாங்கூருக்கு
வருகை தாருங்கள் ஆண்டை முன்னிட்டு எண்பது லட்சத்திற்கும்
மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க
சிலாங்கூர் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு குறிப்பாக சுற்றுலாத் துறையினருக்கு
நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு திட்டங்கள்
வகுக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
என்று சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி
லிம் கூறினார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை மலேசியாவுக்கு குறிப்பாக சிலாங்கூருக்கு
பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வரும். வருமானத்தை ஈட்டித்
தருவதற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை பிடிக்கக் கூடிய
மற்ற முதலீடுகளுடன் ஒப்பிடுகையில் சுற்றுலாத் துறை குறுகிய
காலத்தில் பொருளாதார அனுகூலங்களை வழங்கும் என்று அவர்
சொன்னார்.
நேற்று ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள ஃபார்ம் இன் தி சிட்டிக்கு
அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.
சுற்றுலாத் துறை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருவதால் சுற்றுலா
தொடர்பான அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளும் அதே வேளையில்
நாட்டின் சுற்றுலா இடங்களைப் பிரபலப்படுத்தும் நடவடிக்கையிலும்
ஈடுபடும்படி சுற்றுலாத் துறையினரை அவர் கேட்டுக் கொண்டார்.
சுற்றுலாத் துறையினர் வெளிநாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்
கொள்வதற்கு ஏற்ற தளங்களை உருவாக்கித் தருவதில் அரசாங்கம்
எப்போதும் உதவி வழங்கி வருவதாகவும் அவர் சொன்னார்.
வெளிநாடுகளில் உள்ள சுற்றுலாத் துறையினருடன் அணுக்கமான
நட்புறவை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக டூரிசம் சிலாங்கூர் மற்றும்
டூரிசம் மலேசியா உள்நாட்டுச் சுற்றுலாத் துறையினரை வெளிநாடுகளுக்கு
அழைத்துச் செல்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.


