கோலாலம்பூர், செப். 5- எதிர்வரும் அக்டோபர் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் 2024 இணைய பாதுகாப்பு மசோதா விரிவான தாகவும் எதிர்காலத்தில் நிகழக்கூடிய இணையக் குற்றங்களை கையாளுக்கூடியதாகவும் விளங்கும்.
இணையத்தை வாழ்க்கையின் அன்றாட தொடர்பு சாதனமாகப் பயன்படுத்தும் அனைத்து மலேசியர்கள் குறிப்பாக சிறார்களின் நலனைக் கருத்தில் கொண்டு இப்புதிய சட்டம் உருவாக்கப் பட்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிம் ஹமிடி கூறினார்.
இந்த விவகாரத்தில் பகடி வதைக்கு ஆளாவோர் மற்றும் மோடிகளால் ஏமாற்றப்படுவோர் குறித்து நாங்கள் மிகவும் கவலை கொள்கிறோம். இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் நிகழலாம் என நாம் கணிக்கும் சில குற்றங்கள் தொடர்பான அம்சங்களையும் இந்த சட்டம் கவனத்தில் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இன்று இங்கு இணைய தீமைகள் தொடர்பான அனைத்துலக சட்ட மாநாட்டை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த மாநாட்டில் பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் அரசிலமைப்புச் சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் மற்றும் மலேசியாவுக்கான ஸ்பெய்ன் தூதர் ஜோஸ் லுய்ஸ் பெர்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த மசோதாவை சட்டத் துறை தலைவர் அலுவலகம் தயாரிக்கும் என்றும் அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின்னர் அது மக்களவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜாஹிட் சொன்னார்.
இந்த மசோதாவை தாம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அதன் செயலாக்க மற்றும் அமலாக்க அதிகாரம் தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையத்தின் வாயிலக தொடர்பு அமைச்சின் வசம் இருக்கும் என்று அஸாலினா முன்னதாக கூறியிருந்தார்.


