ஷா ஆலம், நவ. 5 - பொருளாதார அம்சங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கை
நிலையின் அடிப்படையில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பீட்டு
வரியை உயர்த்தும் ஜோகூர் மாநிலத்தின் அணுகுமுறையைப்
பின்பற்றுவது குறித்து சிலாங்கூர் அரசு பரிசீலித்து வருகிறது.
மதிப்பீட்டு வரியை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்த மாநில
அரசுகளுக்கு 1976ஆம் ஆண்டு ஊராட்சி மன்றச் சட்டம் அனுமதி வழங்கிய
போதிலும் மாநில அரசு பல ஆண்டுகளாக வரி உயர்வை
அமல்படுத்தவில்லை என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் இங் சுயி லிம் கூறினார்.
சொத்துடைமை மேலாண்மை செலவினங்கள் அதிகரித்து வரும்
நிலையில் நகரத் திட்டமிடலை முறையாக மேற்கொள்ளவும் மக்களுக்கு
உரிய வசதிகளை ஏற்படுத்தித் தரவும் மதிப்பீட்டு வரியை மறுஆய்வு
செய்வது அவசியமாகிறது என்று அவர் சொன்னார்.
சிலாங்கூரில் உள்ள சில ஊராட்சி மன்றங்கள் குறிப்பாக காஜாங்
நகாண்மைக் கழகம் (39 ஆண்டுகள்), கோல லங்காட் நகராண்மைக் கழகம்
(37 ஆண்டுகள்) கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் வரை மதிப்பீட்டு வரியை
மறுஆய்வு செய்யவில்லை.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரியை மறுஆய்வு செய்ய சட்டம்
அனுமதிக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. ஆனால், ஊராட்சி
மன்றங்கள் அவ்வாறு செய்வதில்லை. இது ஒரு ஆரோக்கியமான
நடவடிக்கை அல்ல என்று மீடியா சிலாங்கூருக்கு அளித்த பேட்டியில்
அவர் சொன்னார்.
மதிப்பீட்டு நடவடிக்கை முடிவுக்கு வந்தவுடன் மக்களுக்கு
சுமையாளிக்காத செயல்துறையைப் பயன்படுத்தி மதிப்பீட்டு வரி மறுசீரமைப்பு அடுத்தாண்டு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
மக்களுக்கு சுமையளிக்க வேண்டாம் என பலர் கூறுகின்றனர். அதே
சமயம் ஜனரஞ்சகத் திட்டங்களை நாம் அமல்படுத்த முடியாது. நடப்பு
மேம்பாடுகளை நாம் சமநிலைப்படுத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.


